ஆவடி: திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் உணவு பாதுகாப்புத் துறை சார்பில் ஆவடியில் 3 நாள் உணவுத் திருவிழா நடக்கிறது. இதனை நேற்று பால்வளத் துறை அமைச்சர் சா.மு.நாசர் தொடங்கி வைத்தார்.

திருவள்ளூர் மாவட்டத்தின் வெள்ளி விழா ஆண்டு நிறைவை முன்னிட்டு, மாவட்ட நிர்வாகம் மற்றும் உணவு பாதுகாப்புத் துறை சார்பில், நேற்று ஆவடி கனரக வாகன தொழிற்சாலை மைதானத்தில் ‘உணவுத் திருவிழா 2022’ நேற்று தொடங்கியது. நாளை (12-ம் தேதி) வரை நடைபெற உள்ள இந்த விழாவை பால்வளத் துறை அமைச்சர் சா.மு.நாசர் தொடங்கி வைத்து, உணவு வகைகளை உண்டார்.

திருவள்ளூர் மாவட்ட மக்களுக்கு பாதுகாப்பான, ஆரோக்கியமான உணவு வகைகளை அறியும் வகையில்நடக்கும் இந்த உணவுத் திருவிழாவில், பிரபலமான உணவு விடுதிகள், இனிப்பகங்கள், உணவுப் பொருட்கள் தயாரிப்புநிறுவனங்கள் சார்பில் நூற்றுக்கும் மேற்பட்ட அரங்குகள்அமைக்கப்பட்டுள்ளன.

அந்த அரங்குகளில், இயற்கை விவசாயம் மூலம் விளைவிக்கப்பட்ட காய்கறி வகைகள், சிறுதானிய உணவுவகைகள், மக்காச் சோளத்தில் தயாரிக்கப்பட்ட உணவு வகைகள், பிரியாணி வகைகள், சோழ மண்டல உணவு வகைகள், வடமாநில உணவு வகைகள் என ஏராளமான உணவு வகைகள் நிரம்பி வழிந்தன. அவைகளை பொதுமக்கள் திரளானோர் ரசித்து ருசித்து மகிழ்ந்ததை காண முடிந்தது.