தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று (டிச.13) முதல் 3 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இன்று காலை 11 மணிக்கு அவர் விமானம் மூலம் தூத்துக்குடி வருகிறார். அங்கிருந்து எட்டயபுரம் செல்லும் ஆளுநர், பாரதியார் மணிமண்டபத்தில் பாரதியார் உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார். பாரதியார் பிறந்த இல்லத்துக்கும் சென்று பார்வையிடுகிறார்.

மாலை 4.30 மணிக்கு தூத்துக்குடி வஉசி துறைமுகத்தை பார்வையிடுகிறார். மாலை 6 மணிக்கு திருச்செந்தூர் செல்லும் ஆளுநர் இரவு அங்குள்ள விருந்தினர் மாளிகையில் தங்குகிறார்.

நாளை (டிச.14) காலை 6 மணி முதல் 7 மணி வரை திருச்செந்தூர் செந்திலாண்டவர் கோயிலில் தரிசனம் செய்கிறார். பின்னர் திருநெல்வேலி மாவட்டம் மகேந்திரகிரியில் உள்ள இஸ்ரோ மையத்துக்கு சென்று பார்வையிடுகிறார். அங்கிருந்து திருநெல்வேலி வரும் ஆளுநர் பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக வளாகத்தில் முன்னாள் ராணுவத்தினர், என்சிசி மாணவர்கள் மற்றும் பல்கலைக்கழக சிண்டிகேட் உறுப்பினர்கள், கல்லூரி முதல்வர்களுடன் கலந்துரையாடுகிறார்.

இரவு திருநெல்வேலியில் தங்கும் ஆளுநர், 15-ம் தேதி காலை 7.30 மணி முதல் 8.30 மணி வரை நெல்லையப்பர் கோயிலில் தரிசனம் செய்கிறார். தொடர்ந்து காலை 10.30 மணி முதல் மதியம் 1.30 மணி வரை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கிறார். பிற்பகலில் மதுரை புறப்பட்டுச் செல்கிறார்.

16-ம் தேதி காலை மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் தரிசனம் செய்கிறார். தொடர்ந்து அன்னை தெரசா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கிறார்.