சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால், தமிழ்நாடு காவலர் வீட்டுவசதி வாரிய தலைவர் ஏ.கே.விஸ்வநாதன் உள்ளிட்ட 5 பேருக்கு டிஜிபியாக பதவி உயர்வு அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால், தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி வாரிய தலைவர் ஏ.கே.விஸ்வநாதன், குடிமைப் பொருள் குற்றப் புலனாய்வு பிரிவு ஏடிஜிபி ஆபாஷ்குமார், அயல் பணியில் இருக்கும் ஏடிஜிபி ரவிச்சந்திரன் ஆகியோருக்கு டிஜிபியாக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.

அவர்கள் அனைவரும் தற்போதுள்ள பதவிகளிலேயே தொடர்வார்கள். அதற்காக ஏடிஜிபி அந்தஸ்தில் உள்ள சென்னை காவல் ஆணையர் பதவி, தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி வாரியதலைவர், குடிமைப் பொருள் குற்றப் புலனாய்வு பிரிவு ஏடிஜிபிஆகிய பதவிகள் டிஜிபி அந்தஸ்துக்கு தரம் உயர்த்தப்பட்டுள்ளன.

அதேபோல, தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணைய உறுப்பினராக இருக்கும் சீமா அகர்வால்,டிஜிபியாக பதவி உயர்வு அளிக்கப்பட்டு, தேர்வாணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும், சென்னை தலைமையிடத்து ஏடிஜிபி சங்கர், நிர்வாகப்பிரிவுக்கும், சென்னை சைபர்கிரைம் பிரிவு ஏடிஜிபி வெங்கடராமன், தலைமையிடத்துக்கும், சென்னை தொழில்நுட்ப பிரிவு ஏடிஜிபி அம்ரேஷ் புஜாரி, சென்னைசைபர் கிரைம் பிரிவுக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சிறப்பு புலனாய்வு பிரிவு ஏடிஜிபி கபில் குமார் சி சரத்கர், அமலாக்கப் பிரிவு ஐஜியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். குற்ற ஆவணக் காப்பக ஏடிஜிபி வினித் தேவ் வான்கடேவுக்கு தொழில்நுட்ப பிரிவு கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டுள்ளது. குற்றப்பிரிவு ஏடிஜிபி மகேஷ்குமார் அகர்வாலுக்கு அமலாக்கப் பிரிவுகூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை உள்துறை முதன்மை செயலர் எஸ்.கே.பிரபாகர் பிறப்பித்துள்ளார்.