சென்னையில் ஒரே நாளில் 7 சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னையில் ரவுடிகளுக்கு எதிரான சிறப்பு ஆய்வு (Drive Against Rowdy Elements ) மூலம் சிறப்பு சோதனைகள் மேற்கொண்டு குற்றத் தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

இதன் தொடர்ச்சியாக, சென்னை பெருநகர காவல் ஆணையர் சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள் மற்றும் குற்றப் பின்னணி நபர்களுக்கு எதிரான ஒரு சிறப்பு தணிக்கை உத்தரவிட்டதன் பேரில், கூடுதல் காவல் ஆணையாளர்கள் அறிவுத்தல்படி, காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான காவல் குழுவினர் 16-ம் தேதியன்று சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள் மற்றும் குற்றப் பின்னணி நபர்களுக்கு எதிரான சிறப்பு சோதனை மேற்கொள்ளப்பட்டது.

இச்சோதனையில், நன்னடத்தை பிணைப் பத்திரம் எழுதி கொடுத்த 471 சரித்திரப் பதிவேடு குற்றவாளிகளைக் கண்காணித்தும், நேரில் சென்று விசாரித்தும் அவர்களின் நடவடிக்கைகள் கண்காணித்து குற்றச் செயல்களில் ஈடுபடாமல் இருக்க அறிவுரைகள் வழங்கப்பட்டது.

மேலும், 35 சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள் திருந்தி வாழ்வதற்கு நன்னடத்தை பிணைப் பத்திரம் எழுதி கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. மேலும், சட்டம் – ஒழுங்குக்கு குந்தகம் விளைவித்த 7 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு, நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டனர்.

மேலும், சென்னை பெருநகர காவல்துறையினர் தொடர்ந்து இதுபோன்ற சிறப்பு சோதனைகள் மேற்கொண்டு குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்கள் கண்டறிந்து சட்டப்படி நடவடிக்கைகள் எடுக்கப்படும் காவல் ஆணையாளர் எச்சரித்துள்ளார்.