75-வது சுதந்திர தினவிழா ஆக. 15-ம் தேதி நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. சென்னை கோட்டை கொத்தளத்தில் நடைபெறும் சுதந்திர தின நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 2-ம் ஆண்டாக தேசியக் கொடி ஏற்ற உள்ளார். இதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகின்றன. சுதந்திர தினவிழாவில் காவல்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெறும்.

அந்தவகையில், இதற்கான ஒத்திகை நிகழ்ச்சி நேற்று சென்னை கோட்டை கொத்தளத்தில் நடைபெற்றது. முதல்நாள் ஒத்திகை நிகழ்ச்சியில் சுதந்திர தினத்தன்று முதல்வரை காவல்துறை வாகன அணிவகுப்புடன் அழைத்து வருவது போன்ற ஒத்திகை மேற்கொள்ளப்பட்டது. அதனை தொடர்ந்து கமாண்டோ படை, குதிரைப் படை, பெண் காவலர்கள் உள்ளிட்ட 7 படைப்பிரிவினர் பங்கேற்ற அணிவகுப்பு மரியாதையை முதல்வர் ஏற்றுக் கொண்டு தேசிய கொடியைஏற்றுவது போன்று ஒத்திகை நடைபெற்றது.

பின்னர், தகைசார் தமிழர் விருது, ஏபிஜே அப்துல் கலாம் விருது, துணிவு மற்றும் சாகச செயலுக்கான கல்பனா சாவ்லா உள்ளிட்ட விருதுகள் வழங்குவது போன்று ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது அந்த பகுதியில் போக்குவரத்துக்கு தடைவிதிக்கப்பட்டு, போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டிருந்தது. இதையடுத்து அடுத்த ஒத்திகைநிகழ்ச்சி ஆக. 13-ம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஒத்திகை நடைபெறும் நாட்கள் மற்றும் ஆக. 15-ம் தேதி சுதந்திர தின நிகழ்ச்சியின்போது, காலை 6 மணி முதல்ஒத்திகை நிகழ்ச்சி முடியும் வரைபோக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து போலீஸார் தெரிவித்துள்ளனர்.

அந்த வகையில், நேப்பியர் பாலம் முதல் போர் நினைவுச் சின்னம் வரை உள்ள காமராஜர் சாலை, போர் நினைவுச் சின்னத்திலிருந்து ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை வடக்கு பகுதிவரை உள்ள ராஜாஜி சாலை, கொடிமரச் சாலைகளில் போக்குவரத்து தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.