திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையத்தில் வக்பு சட்ட திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. ஆட்டோ, கார், வேன் உள்ளிட்ட வாகனங்கள் ஓடவில்லை.
மேலப்பாளையம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் இரண்டு லட்சத்துக்கு மேற்பட்ட முஸ்லிம்கள் வசிக்கிறார்கள். இங்கு அனைத்து முஸ்லிம் அமைப்புகள் ஜமாத்துகள் மற்றும் அனைத்து கட்சிகள் சார்பில் வக்பு சட்ட திருத்தத்துக்கு எதிராக 24 மணி நேர கடையடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
அதன்படி இன்று (ஏப்.18) காலையிலிருந்து மேலப்பாளையத்தில் 1500 மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. மேலும் ஆட்டோ கார் வேன் உள்ளிட்ட வாகனங்கள் ஓடவில்லை என்பதால் சாலைகள் வெறிச்சோடி உள்ளன. இன்று மாலையில் அனைத்து ஜமாத் மற்றும் அனைத்து கட்சிகள் சார்பில் மேலப்பாளையத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், ஜமாத் அமைப்புகளின் நிர்வாகிகள் பங்கேற்று பேசுகிறார்கள்.
மேலப்பாளையத்தில் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை பள்ளிவாசல்களில் தொழுகைக்குப் பின்னர் வக்பு சட்ட திருத்தத்துக்கு எதிராக இஸ்லாமியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.