சாலைகயில் நீண்ட நாட்கள் நிறுத்தப்பட்டுள்ள 193 வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்க சென்னை காவல் துறை முடிவு செய்துள்ளது.

சென்னை பெருநகரில் சாலைகள், தெருக்கள், வாகன நிறுத்துமிடங்கள் மற்றும் இதர இடங்களில் நீண்ட நாட்கள் நிறுத்தியிருக்கும் வாகனங்களை கணக்கெடுத்து, விசாரணை மேற்கொண்டு, உரியவர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டார். இதன்படி சட்டம், ஒழுங்கு மற்றும் போக்குவரத்து காவல் அதிகாரிகள் தலைமையிலான குழுவினர், கேட்பாரற்று மற்றும் உரிமை கோராத வாகனங்கள் மீது நடவடிக்கை ஒரு நாள் சிறப்பு பணியை மேற்கொண்டனர்.

இதன்படி நேற்று (ஜன.7) சாலையோரங்களில் நிறுத்தியிருந்த 8 வாகனங்கள் மற்றும் இதர இடங்களில் 12 வாகனங்கள் என நீண்ட நாட்கள் நிறுத்திவைத்திருந்த உரிமை கோராத மற்றும் கேட்பாரற்று கிடந்த 19 இருசக்கர வாகனங்கள், மற்றும் 1 இலகுரக வாகனம் என மொத்தம் 20 வாகனங்கள் கைப்பற்றப்பட்டு அதன் விவரங்கள் சேகரிக்கப்பட்டது. மேலும், ஏற்கனவே, கேட்பாரற்று உரிமை கோராமல் இருந்த 272 இருசக்கர வாகனங்கள், 2 ஆட்டோக்கள் என மொத்தம் 274 வாகனங்கள் கைப்பற்றப்பட்டு, காவல் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளது.

இதன்படி 291 இருசக்கர வாகனங்கள், 2 ஆட்டோக்கள் மற்றும் 1 இலகுரக வாகனம் என மொத்தம் 294 வாகனங்களின் பதிவு எண்களை கொண்டு அதன் உரிமையாளர்கள் விவரங்கள் மற்றும் ஏதேனும் குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்டுள்ளதா என தீவிர விசாரணை மேற்கொண்டு 10 இருசக்கர வாகனங்கள் அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. உரிமை கோராத, முறையான ஆவணங்கள் மற்றும் விவரங்கள் இல்லாத 193 வாகனங்கள் கு.வி.மு.ச. பிரிவு 102ன் கீழ் கைப்பற்றப்பட்டு, சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டது.