வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட காருக்கு வரி செலுத்த தாமதமானதால் விதிக்கப்பட்ட அபராதத்தை ரத்து செய்யக் கோரி நடிகர் விஜய் தொடர்ந்த வழக்கில், “2019 ஜனவரிக்கு முன் முழு நுழைவு வரியையும் செலுத்தியிருந்தால் அபராதம் விதிக்க கூடாது” என்று உத்தரவிட்டு சென்னை உயர் நீதிமன்றம் வழக்கை முடித்து வைத்துள்ளது.

நடிகர் விஜய், கடந்த 2005-ம் ஆண்டு அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்த 63 லட்ச ரூபாய் மதிப்புள்ள BMW X5 காருக்கு நுழைவு வரி செலுத்த தமிழக அரசு வணிக வரித்துறை உத்தரவிட்டது. இதை எதிர்த்து விஜய் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

நுழைவு வரி வசூலிக்க மாநிலங்களுக்கு அதிகாரம் உள்ளது என உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த பின், விஜய் தரப்பில் 7 லட்சத்து 98 ஆயிரத்து 75 ரூபாய் நுழைவு வரி செலுத்தப்பட்டது.

இந்நிலையில், வரி செலுத்தப்படாத இடைப்பட்ட காலத்திற்கான அபராதமாக 30 லட்சத்து 23 ஆயிரத்து 609 ரூபாய் செலுத்த வேண்டுமென 2021 டிசம்பர் 17-ல் வணிக வரித்துறை உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து விஜய் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். மேலும் இதே கோரிக்கைகளுடன் அடையார் கேட் ஹோட்டல் மற்றும் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் ஆகியோரும் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

வழக்கு விசாரணையின்போது, நடிகர் விஜய் தரப்பு வழக்கறிஞர், “கார் இறக்குமதி செய்யப்பட்டதில் இருந்து மாதத்திற்கு 2 சதவீதம் என கணக்கிட்டு மட்டுமே அபராதம் விதிக்கப்பட வேண்டும். ஆனால் மனுதாரருக்கு 400 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது” என்று வாதிடப்பட்டிருந்தது. வணிக வரித்துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், இந்த வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதி சுரேஷ்குமார், “2019 ஜனவரிக்கு பின்னும் நுழைவு வரியை முழுமையாக செலுத்தியிருக்காவிட்டால் அபராதம் விதிக்கலாம். 2019 ஜனவரிக்கு முன் முழு நுழைவு வரியையும் செலுத்தியிருந்தால் அபராதம் விதிக்க கூடாது” என்று உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டார். அதேநேரம், இறக்குமதி கார்களுக்கு நுழைவு வரி செலுத்த வேண்டியது கட்டாயம் என்று ஹாரிஸ் ஜெயராஜ் வழக்கில் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.