நாமக்கல், கிருஷ்ணகிரி, திருப்பூர், திண்டுக்கல் மாவட்டங்களில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

கேரளாவில் இருந்து தமிழகம் வருபவர்களுக்கு கரோனா தொற்றுஇல்லை (நெகட்டிவ்) என்பதற்கான சான்றிதழ் அல்லது 2 முறை தடுப்பூசி செலுத்திக் கொண்டதற்கான சான்றிதழ் கடந்த 5-ம் தேதி முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. சான்றிதழ் இல்லாதவர்களுக்கு கரோனா பரிசோதனை செய்வதற்காக, ரயில், விமான நிலையங்கள், எல்லைப் பகுதிகளில் மருத்துவக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

அதன்படி, கேரளாவில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு நேற்று அதிகாலை ஆலப்புழா ரயிலில் வந்த பயணிகளுக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

அமைச்சர்கள் ஆய்வு

இப்பணிகளை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு செய்தார். இந்து சமயஅறநிலையத் துறை அமைச்சர்சேகர்பாபு, மக்கள் நல்வாழ்வுத் துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன், சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, துணை ஆணையர் (சுகாதாரம்) எஸ்.மனீஷ்,பொது சுகாதாரத் துறை இயக்குநர்செல்வவிநாயகம், ரயில்வே கோட்ட மேலாளர் பி.மகேஷ் ஆகியோர் உடன் இருந்தனர்.

ஆய்வுக்குப் பிறகு, செய்தியாளர்களிடம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:

அண்டை மாநிலமான கேரளாவில் தினமும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கரோனா தொற்றால் பாதிக்கப்படுகின்றனர். இதை கட்டுப்படுத்த அம்மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

கடந்த 5 நாட்களில் கேரளாவில் இருந்து தமிழகத்துக்கு ரயில்களில் வந்த பயணிகள் 277 பேரின் மாதிரிகள் பரிசோதனைக்காக சேகரிக்கப்பட்டுள்ளன. கேரளாவில் இருந்து ரயில், விமானம், சாலை மார்க்கமாக வரும் அனைத்து பயணிகளுக்கும் பரிசோதனை செய்யப்படுகிறது. சென்னை விமான நிலையத்தில் 13 நிமிடத்தில் சோதனை முடிவைஅறிந்துகொள்ளும் வகையில் அதிநவீன ஆய்வகக் கருவி அமைக்கப்பட்டு கடந்த 2 நாட்களாக செயல்பாட்டில் உள்ளது.

தமிழக அரசின் பெரு முயற்சி

தமிழகத்தில் புதிதாக தொடங்கப்பட்ட 11 மருத்துவக் கல்லூரிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு அனுமதி வழங்குமாறு முதல்வர் ஸ்டாலின் சமீபத்தில் டெல்லி சென்றபோது, பிரதமரிடம் நேரில் கேட்டுக்கொண்டார். மத்திய சுகாதாரத் துறை அமைச்சரிடமும் இக்கோரிக்கை தெரிவிக்கப்பட்டது.

தமிழக அரசின் இந்த பெருமுயற்சியின் காரணமாக, மருத்துவக் கல்லூரிகளை மத்திய சுகாதாரத் துறை அலுவலர்கள் ஆய்வு செய்து, நாமக்கல், கிருஷ்ணகிரி, திருப்பூர், திண்டுக்கல் மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள 4 மருத்துவக் கல்லூரிகளில் தலா 150 மாணவர்கள் வீதம் 600 மாணவர்களுக்கு இந்த ஆண்டே சேர்க்கை வழங்க அனுமதிஅளிக்கப்பட்டுள்ளது. மற்ற 7 கல்லூரிகளிலும் இந்த ஆண்டு மாணவர்சேர்க்கைக்கு அனுமதி வழங்குமாறு மத்திய அரசிடம் தமிழக அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

2.49 கோடி தடுப்பூசிகள்

தமிழகத்தில் இதுவரை 2.33 கோடி தடுப்பூசிகள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. இதில் 2.32கோடி தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு போடப்பட்டுள்ளன. 7 லட்சத்து 6,196 தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன. தனியார் மருத்துவமனைகளுக்கு 25 சதவீத தடுப்பூசிகள் (20.48 லட்சம்) வழங்கப்பட்டுள்ளன. இதில் பெரு நிறுவனசமூகப் பொறுப்பு (சிஎஸ்ஆர்) நிதிஉட்பட பல்வேறு வழிமுறைகளில்17.17 லட்சம் தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு போடப்பட்டுள்ளன. தமிழகத்தில் இதுவரை அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் சார்பில் 2.49 கோடி தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.

நாட்டிலேயே 2 தவணை தடுப்பூசிகளை அதிக அளவில் செலுத்திய மாநகராட்சியாக சென்னை மாநகராட்சி தொடர்ந்து முதலிடம் வகிக்கிறது. சென்னையில் இதுவரை 33.43 லட்சம் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.