சென்னையில் 2-ம் கட்ட திட்டங்களுக்காக 26 மெட்ரோ ரயில்கள் வாங்க ‘அல்ஸ்ட்ராம்’ நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

மெட்ரோ ரெயில் திட்டத்தில் 2-ம் கட்டமாக 3 புதிய வழித்தடங்களில் 119 கிலோ மீட்டர் தொலைவுக்கு மெட்ரோ ரெயில் பாதைகள் அமைக்கப்பட உள்ளன. மாதவரம்-சிப்காட், மாதவரம்-சோழிங்கநல்லூர், கலங்கரை விளக்கம்- பூந்தமல்லி இடையே மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட உள்ளன.

கலங்கரை விளக்கம்- பூந்தமல்லி இடையே 26.8 கி.மீ. நீளமுள்ள வழித்தடத்தில் 9 ரயில் நிலையங்கள் சுரங்கப் பாதையில் அமைக்கப்படுகிறது. இதற்காக இந்த வழித்தடத்துக்கு இடையே உள்ள 133 மரங்கள் அகற்றப்பட உள்ளதாகவும், அதனை ஈடுகட்டும் வகையில் 1,596 மரக்கன்றுகள் நடப்பட உள்ளதாகவும் தெரிவித்து சுற்றுச் சூழல் அமைச்சகத்திடம் மெட்ரோ ரயில் நிர்வாகம் அனுமதி கோரியது. ரூ.12,669 கோடி செலவிலான இந்த திட்டத்தில் ரூ.22 கோடியே 33 லட்சம் சுற்றுச்சூழல் மேலாண்மைக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது எனவும் மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்து இருக்கிறது.

இதை ஏற்றுக் கொண்ட சுற்றுச்சூழல் அமைச்சகம் சென்னை கலங்கரை விளக்கம்-பூந்தமல்லி இடையேயான மெட்ரோ ரயில் வழித்தடத்துக்கு அனுமதி வழங்கி உள்ளது. உயர்மட்டம் மற்றும் சுரங்கப்பாதையில் ரயில்களை இயக்குவதற்கான வழித்தடங்களை அமைப்பதற்கு தேவையான உபகரணங்கள், சுரங்கம் தோண்டும் இயந்திரம் போன்றவை விரைவில் வர உள்ளன.

இந்தநிலையில், மாதவரம்-சிப்காட், மாதவரம்-சோழிங்கநல்லூர், கலங்கரை விளக்கம்- பூந்தமல்லி இடையே மெட்ரோ ரயில்கள் சேவைக்கு ரயில் பெட்டிகள் தயாரிக்க ஒப்பந்தம் கொடுக்கப்பட்டுள்ளது. ‘அல்ஸ்ட்ராம்’ நிறுவனத்துக்கு 78 பெட்டிகள் தயாரிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. ஒரு மெட்ரோ ரயிலுக்கு 26 பெட்டிகள் வீதம் 78 பெட்டிகள் தயாரிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

3 பெட்டிகளை உள்ளடக்கிய ஒரு மெட்ரோ ரயிலின் நீளம் 66 மீட்டர் ஆகும். இதில் 900 பயணிகள் ஒரே நேரத்தில் பயணம் செய்ய முடியும். திட்டம் ஒன்றில் 4 பெட்டிகள் கொண்ட ரயில் தயாரிக்கப்பட்டது. அது 1,200 பேர் பயணம் செய்யக் கூடியதாகும்.