அதிமுக தலைமை அலுவலகத்தின் சாவியை எடப்பாடி பழனிச்சாமி வசம் ஒப்படைக்க உத்தரவிட்டட சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஜூலை 11-ம் தேதி அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் நடைபெற்றது. அப்போது ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வந்தனர். அங்கு ஏற்கெனவே கூடியிருந்த எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்களுக்கும், ஓ. பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து வட்டாட்சியர் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சீல் வைத்தார். மேலும் யாரிடம் சாவியை ஒப்படைக்க வேண்டும் என நீதிமன்றம் கூறிய பிறகு சாவி வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் தனித்தனியே சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் ஜூலை 20-ம் தேதி, அதிமுக தலைமை அலுவலகத்தின் சாவியை எடப்பாடி பழனிச்சாமியிடம் ஒப்படைக்குமாறு உத்தரவிட்டது. மேலும் ஒரு மாதத்திற்கு அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அதிமுக தலைமை அலுவலகத்திற்குள் அனுமதிக்க கூடாது எனவும் போதிய போலீஸ் பாதுகாப்பு வழங்கவும் உத்தரவிட்டது.

இந்நிலையில் ஓ பன்னீர்செல்வம் தரப்பில் சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பாக ஏற்கெனவே உச்ச நீதிமன்றத்தில் முந்தைய நாட்களில் பல்வேறு வழக்குகள் விசாரணைக்கு வந்த போது உச்சநீதிமன்றத்தின் நீதிபதிகள் அதிமுக விவகாரம் தொடர்பாக எத்தனை வழக்குகள் தான் உள்ளது? என கேள்வி எழுப்பியிருந்தனர்.

இந்நிலையில், அதிமுக தலைமை அலுவலகத்தின் சாவியை எடப்பாடி பழனிசாமியிடம் ஒப்படைக்கப்பட்டதற்கு எதிராக மேலும் ஒரு மேல்முறையீட்டு வழக்கு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.