சென்னை: அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வைக்கப்பட்டுள்ள சீலை அகற்றி கோரி, அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்துள்ள வழக்குகள் தலைமை நீதிபதியின் ஒப்புதல் பெற்றபின் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

அதிமுக தலைமை அலுவலகம் முன் ஜூலை 11-ம் தேதியன்று, ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்கள் மோதிக்கொண்டனர்.சட்டம் ஒழுங்கு பிரச்னையை காரணம் காட்டி, அதிமுக அலுவலகத்துக்கு வருவாய் துறையினர் சீல் வைத்தனர்.மேலும், அலுவலகத்தின் மீது யாருக்கு உரிமை உள்ளது என்பது குறித்து ஜூலை 25ம் தேதி ஆஜராகி விளக்கமளிக்கும்படி இரு தரப்பினருக்கும் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அதிமுக அலுவலகத்துக்கு வைக்கப்பட்ட சீலை அகற்ற உத்தரவிடக் கோரி மனுத்தாக்கல் செய்ய உள்ளதாகவும், அந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என அதிமுக தற்காலிக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தரப்பிலும், ஓ.பன்னீர்செல்வம் தரப்பிலும், தனித்தனியாக மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

முன்னதாக நேற்று, இரு தரப்பிலும் நீதிபதி சதீஷ்குமார் முன்பு ஆஜராகி, அவசர வழக்காக விசாரணைக்கு எடுக்க வேண்டும் என முறையீடு செய்யப்பட்டது. இதையடுத்து, மனுத்தாக்கல் செய்யும் பட்சத்தில் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக தெரிவித்திருந்தார்.

இன்று வழக்கம்போல், நீதிபதி சதீஷ்குமார் வழக்குகளை விசாரிக்க தொடங்கினார். ஆனால், இந்த இரண்டு மனுக்களும் இன்று விசாரணைக்குப் பட்டியலிடப்படவில்லை. அப்போது எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “மனு தாக்கல் செய்யப்பட்டுவிட்டது, மனுவிற்கு எண் இடும் நடைமுறைகளும் முடிந்துவிட்டன. எனவே அந்த மனுவை அவசர வழக்காக விசாரணைக்கு எடுக்க வேண்டும்” என்று முறையீடு செய்தார்.

அப்போது நீதிபதி, “இது எம்எல்ஏ தாக்கல் செய்துள்ள வழக்கு என்பதால், இதுதொடர்பாக தலைமை நீதிபதியின் ஒப்புதல் பெற்று அதற்கான நடைமுறைகளை பின்பற்றி,இரண்டு மனுக்களும் முறையாக விசாரணைக்குப் பட்டியலிடப்படும்” என்று தெரிவித்தார்.