Site icon Metro People

திருவாரூரில் ஐஸ்வர்யா ராஜேஷின் ‘ஃபர்ஹானா’ பட காட்சிகள் ரத்து

ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள ‘ஃபர்ஹானா’ படத்திற்கு எதிர்ப்பு கிளம்பிய நிலையில் திருவாரூரில் பர்ஹானா பட காட்சிகள் ரத்து செய்யபட்டதாக தியேட்டர் நிர்வாகம் அறிவித்தது. இதனால் திரைப்படம் பார்க்க வந்தவர்கள் திரும்பிச் சென்றனர்.

நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் இன்று திரையரங்குகளில் வெளியான படம் ‘ஃபர்ஹானா’. திருவாரூர் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள தைலம்மை திரையரங்கில் இப்படம் மாலை 6 மணிக்கு திரையிடப்பட இருந்தது. இந்த படத்துக்கு இஸ்லாமிய அமைப்புகள் கடுமையான எதிர்ப்பை பதிவு செய்தனர்.

குறிப்பாக திருவாரூரில் ‘ஃபர்ஹானா’ திரைப்படம் திரையிடப்படும் திரையரங்குகளை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதனடிப்படையில், இன்று காலை முதல் 20-க்கும் மேற்பட்ட போலீஸார் திரையரங்க வாயிலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

இந்த நிலையில் ‘ஃபர்ஹானா’ படத்துக்கு தொடர்ந்து எதிர்ப்பு கிளம்பியதால், திருவாரூர் தைலம்மை திரையரங்கில் இந்த படத்திற்கான காட்சிகள் ரத்து செய்யப்படுவதாக தியேட்டர் நிர்வாகம் சார்பில் நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது.இதனையடுத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார் திரும்ப பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version