டெல்லியில் காற்று மாசுபாட்டுக்கு ஊடே தெரிந்த தண்ணீர் தொட்டி வேற்றுகிரக வாசிகளின் பறக்கும் தட்டுபோல் காட்சிப்பிழையாக, அதன் நிமித்தமான இணையவாசிகளின் ரியாக்‌ஷன் சிரிப்புக்கு உத்தரவாதம் தருவதாக அமைந்துள்ளது.

தேசிய தலைநகர் டெல்லியில் தீபாவளி பண்டிகையைத் தொடர்ந்து காற்று மாசு அதிகரித்து வருகிறது. அண்மையில் காற்றின் தரக்குறியீடு 400 வரை எட்டி மிகவும் மோசம் என்ற நிலையை அடைந்தது. இதனையடுத்து தொடர்க்கப் பள்ளி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டது. ஊழியர்கள் வீட்டிலிருந்து பணிபுரிய அறிவுறுத்தப்பட்டது. காற்று மாசினை கட்டுப்படுத்த டெல்லி அரசு பல்வேறு தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

காற்றின் தரத்தை அளக்கும் அமைப்பானது, காற்றின் தரக் குறியீடு 50 என்றிருந்தால் அது நல்ல நிலைமை, 100 முதல் 101 என்றளவில் இருந்தால் திருப்திகரமான தரம், 101 முதல் 200 வரை இருந்தால் அது மிதமானது, 201 முதல் 300 வரை இருந்தால் அது மோசமான தரம், 301 முதல் 400 வரை இருந்தால் மிகவும் மோசமான தரம், 401 முதல் 500 என்றிருந்தால் அதிபயங்கர மோசம் என்று நிர்ணயித்துள்ளது. ஆனால், இன்றைய நிலவரப்படி டெல்லியில் காற்றின் தரம் 300-ஐயும் தாண்டி மோசமாகவே உள்ளது.

இந்நிலையில்தான் இணையத்தில் வைரலாகியுள்ளது ஏலியன்களின் (வேற்று கிரகவாசிகளின்) வாகனம் என்று அறியப்படும் யுஎஃப்ஓ (பறக்கும் தட்டு). அப்படியொரு புகைப்படத்தை டெல்லிவாசி தனது ட்விட்டரில் பகிர அதனை வேகமாக வைரலாக்கிய நெட்டிசன்கள், “என்னது டெல்லியில் ஏலியன்களா?” என்று சிலாகிக்க, இன்னும் சிலர் “அடடே, டெல்லி காற்று மாசுக்கு ஊடே தண்ணீர் தொட்டி பறக்கும் தட்டானதே” என்று கிண்டல் செய்து வருகின்றனர்.