Site icon Metro People

திமுக அரசைக் கண்டித்து அண்ணாமலை தலைமையில் பாஜகவினர் உண்ணாவிரதம்: சென்னையில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

சென்னை: தேர்தல் சமயத்தில் கொடுத்த வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றவில்லை என்று கண்டித்தும், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், சென்னை வள்ளுவர் கோட்டத்தில் பாஜகவினர் அக்கட்சியின் தலைவர் அண்ணாமலை தலைமையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழகம் முழுவதும் உள்ள மாவட்டத் தலைநகரங்களில், பாஜக சார்பில் இன்று உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

சென்னையில் அண்ணாமலை தலைமையில் நடந்த போராட்டத்தில், பெட்ரோல் டீசல் விலை குறைப்பு, கேஸ் சிலிண்டருக்கு மானியம் குறைப்பு உள்ளிட்ட தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக அரசைக் கண்டித்து, கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன. அதேபோல் பூரண மதுவிலக்கு, சட்டம் ஒழுங்கு பிரச்சினை, தொடரும் லாக்அப் மரணங்களை கண்டித்தும் இந்த போராட்டத்தில் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

சென்னையில் நடைபெற்று வரும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொண்டர்கள், நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டுள்ளனர். இன்று மாலை 5 மணிக்கு உண்ணாவிரதப் போராட்டம் முடிவதற்குமுன் கட்சியின் தலைவர் அண்ணாமலை உரையாற்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Exit mobile version