எஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘வதந்தி’ இணையத் தொடரின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. அண்மையில் புஷ்கர் – காய்த்ரி இயக்கத்தில் வெளியான ‘சுழல்’ இணையத் தொடர் ஓடிடியில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து, இருவரும் இணைந்து புதிய தொடர் ஒன்றை தயாரித்துள்ளனர். இதற்கு ‘வதந்தி’ என பெயரிடப்பட்டுள்ளது. எஸ்.ஜே.சூர்யா முதன்மைக் கதாபாத்திரமாக நடிக்கும் இந்தத் தொடரை ஆன்ட்ரியூ லூயிஸ் இயக்கியுள்ளார். இவர் இதற்கு முன்பு ‘லீலை’ என்கிற தொடரை இயக்கியிருந்தார்.

தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் இந்தத் தொடரை காண முடியும் என தெரிவிக்கப்படுள்ளது. இதில் லைலா, நாசர், விவேக் பிரசன்னா, ஹரீஷ் பேரடி, ஸ்ம்ருதி வெங்கட், குமரன் தங்கராஜன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்நிலையில், இதன் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.

ட்ரெய்லர் எப்படி? – 2.23 நிமிடங்கள் ஓடும் இந்த ட்ரெய்லர் ‘விலங்கு’ இணையத் தொடரை நினைவுப்படுத்துகிறது. மொத்த ட்ரெய்லரும் வழக்கமான க்ரைம் – த்ரில்லர் பாணியில் உருவாகியுள்ளது. கொலை ஒன்று நிகழ, அதனை நடிகர் எஸ்.ஜே.சூர்யா விசாரிக்கிறார். குற்றவாளி யார் என்பதை கண்டுபிடிக்க முடியாமல் அவர் திணறும் வகையில் ட்ரெய்லர் உவாக்கப்பட்டுள்ளது. ‘சுழல்’, ‘விலங்கு’ என தமிழில் ஹிட் அடித்த தொடர்களில் வரிசையில் அதே மிஸ்ட்ரி க்ரைம் த்ரில்லராக இந்த வெப்சீரிஸ் உருவாகியிருப்பதை உணரமுடிகிறது. மேலும், வழக்கமான பாணி என்றபோதிலும் அதன் திரை ஆக்கமும் சுவாஸ்யமும் வெற்றித் தொடரின் வரிசையில் நிலைத்து நிற்கை வைக்கும். இந்த இணைய தொடர் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வரும் டிசம்பர் 2-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.