குளிர்கால ஒலிம்பிக்கில் இரண்டு விதமான போட்டிகளில் பங்கேற்கும் முதல் இந்தியர் என்ற தனிச் சிறப்பைப் பெற்ற பனிச்சறுக்கு விளையாட்டு வீரரான தனது மகன் ஆரிப் முகம்மது கான் இதுவரை பெற்ற பதக்கங்களை பெருமிதத்துடன் காட்டினார் காஷ்மீரைச் சேர்ந்த தாய்.

நவீனகால ஒலிம்பிக்குகள் தொடங்கி நூற்றாண்டை கடந்த நிலையில், எண்பதுகளில் தொடங்கப்பட்ட குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளும் முக்கியத்துவம் பெற்று வருகின்றன. தொடக்கத்தில் வழக்கமான (அதாவது கோடைக்கால) ஒலிம்பிக்ஸ் நடத்தப்படும் நாட்டிலேயே குளிர்கால ஒலிம்பிக்ஸும் நடத்தப்பட வேண்டும் என்றும், இவை ஒரே ஆண்டில் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டது. ஆனால், குளிர்காலத்தில் வழக்கமான ஒலிம்பிக்ஸை நடத்த முடியுமா? இரண்டு ஒலிம்பிக்ஸையும் ஒரே நேரத்தில் நடத்தினால் போட்டி முடிவுகளை தனித்தனியாக அறிவிப்பதா? இணைத்து பதக்கங்களைக் கணக்கிட்டு வெற்றியாளரைத் தீர்மானிப்பதா? அப்படிச் செய்தால் குளிர்கால விளையாட்டுக்கள் ஆடும் சூழலே இல்லாத நாடுகளுக்கு அது அநீதி செய்வதாக ஆகாதா? இந்தக் கேள்விகள் எழ, குளிர்கால ஒலிம்பிக்ஸுக்கான விதிகள் மாற்றி அமைக்கப்பட்டன.

என்னென்ன போட்டிகள்: பின்னர் குளிர்கால ஒலிம்பிக் (வின்டர் ஒலிம்பிக்ஸ்) என்று தனிப்பிரிவே உருவானது. வழக்கமான நடைபெறும் (கோடைக்கால) ஒலிம்பிக்ஸில் இருந்து 1986ல்தான் முதன்முதலாக குளிர்கால ஒலிம்பிக்ஸ் பிரிக்கப்பட்டது. இதில் ஆல்பைன் பனிச்சறுக்கு, பயாத்லான், பாப் இசுலெட், கிராஸ் கன்ட்ரி பனிச்சறுக்கு, கர்லிங், ஃபிகர் பனிச்சறுக்கு, ஃப்ரீஸ்டைல் பனிச்சறுக்கு, பனி வளைதடியாட்டம், லூஜ், நோர்டிக் கம்பைன்டு, குறுந்தொலைவு விரைவுப் பனிச்சறுக்கு, எலும்புக்கூடு ஸ்லெட், பனிச்சறுக்கு தாண்டுதல், பனிப்பலகை, விரைவுப் பனிச்சறுக்கு போன்ற விளையாட்டுக்கள் விளையாடப்படுகின்றன.

பெய்ஜிங் செல்லும் ஆரிப் முகம்மது கான்: இந்த ஆண்டுக்கான குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் பெய்ஜிங்கில் வரும் பிப்ரவரி 4-ல் தொடங்குகிறது. இதில் ஆல்பைன் பனிச்சறுக்கு விளையாட்டுப் பிரிவிலான போட்டியில் பங்கேற்க காஷ்மீரைச் சேர்ந்த ஆரிஃப் முகம்மது கான் தகுதி பெற்றுள்ளார். குறிப்பாக, இரு பிரிவு போட்டிகளில் தகுதி பெற்ற முதல் இந்தியர் என்ற பெருமைக்கும் உரியவராகிறார் ஆரிப் முகம்மது கான்.

தாய் பெருமிதம்: வடக்குக் காஷ்மீரின் தனது சொந்த ஊரான கொய்வாரா டாங்மார்க் பகுதிளில் நடைபெற்ற பல்வேறு வேறுபட்ட போட்டிகளில் ஆரிப் முகம்மது கான், கலந்துகொள்வது வழக்கம். சுற்றுவட்டாரங்களில் நடைபெறும் பல விளையாட்டுப் போட்டிகளிலும் கலந்துகொண்டு ஏராளமான பரிசுகளையும் அவர் வென்றுள்ளார். பங்கேற்ற போட்டிகளில் எல்லாம் வெற்றிவாகை சூடிவரும் ஆரிப் மும்மது கான் வீட்டுக்குக் கொண்டுவந்த பதக்கங்களும், கோப்பைகளும், பரிசுகளும் விட்டின் அலமாரியில் நிறைந்து கிடப்பதை அவரது தாய் பெருமிதத்தோடு காட்டினார்.

ஆரிப் முகம்மது கான், ஏற்கெனவே தேசிய, தெற்காசிய ஆல்பைன் சறுக்கு விளையாட்டுகளின் சாம்பியன் என்பது குறிப்பிடத்தக்கது.