கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நடன இயக்குநருக்கு சிவசங்கரின் சிகிச்சை செலவுக்கு உதவுவதாக சோனு சூட் அறிவித்துள்ளார்.

பிரபல நடன இயக்குநரும் நடிகருமான சிவசங்கருக்கு கரோனா தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தமிழ் மற்றும் தெலுகில் முன்னணி நடன இயக்குநராக வலம் வந்தவர் சிவசங்கர். ‘திருடா திருடி’, ‘மகதீரா’, ‘பாகுபலி’ உள்ளிட்ட படங்களில் நடன இயக்குநராக பணியாற்றியுள்ளார். ‘மகதீரா’ படத்தில் ஒரு பாடலுக்காக இவருக்கு தேசிய விருது வழங்கப்பட்டது. இது தவிர ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’, ‘தில்லுக்கு துட்டு’,‘தானா சேர்ந்த கூட்டம்’ உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு சிவசங்கருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிவசங்கருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. சிவசங்கருடன் அவரது மனைவி, மூத்த மகன் ஆகியோருக்கும் தொற்று உறுதிசெய்யப்பட்டு அவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. எனினும் அவரது உடல்நிலை மேலும் மோசமடைந்ததால் தற்போது அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிவசங்கரின் சிகிச்சைக்கு அதிக பணம் தேவைப்படுவதால் அவரது இளைய மகன் சமூக வலைதளங்களில் உதவி கோரியிருந்தார். இதனை பலரும் சமூக வலைதளங்கல் பகிர்ந்து வந்தனர்.

இந்நிலையில் சிவசங்கரின் சிகிச்சைக்கு உதவி கோரும் ஒரு பதிவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள நடிகர் சோனு சூட் ‘நான் ஏற்கெனவே அவர்கள் குடும்பத்துடன் பேசிக் கொண்டிருக்கிறேன். அவரது உயிரை காக்க என்னால் முடிந்த உதவியை செய்கிறேன்’ என்று கூறியுள்ளார்.