திருவாரூரில் தியாகராஜர் கோயில் ஆழித் தேரோட்டம் இன்று (ஏப்.1) நடைபெறுகிறது. திருவாரூர் தியாகராஜர் கோயிலின் பங்குனித் திருவிழா கடந்தமார்ச் 9-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதைத்தொடர்ந்து தினந்தோறும் விநாயகர், முருகன், சண்டிகேஸ்வரர்,சந்திர சேகரர், அம்பாள் உள்ளிட்ட பஞ்சமூர்த்திகள் புறப்பாடு நடைபெற்று வந்தது.

விழாவின் முக்கிய நிகழ்வான ஆழித் தேரோட்டம் இன்று காலை நடைபெறுகிறது. இதையொட்டி நேற்று இரவு தியாகராஜப் பெருமான் அஜபா நடனத்துடன் தேரில் எழுந்தருளினார்.

இந்த பெரிய தேரை இன்று காலை 7.30 மணியளவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க உள்ளனர். இந்தத் தேர், கீழ வீதி, தெற்கு வீதி, மேல வீதி, வடக்கு வீதி வழியாக சென்று மாலையில் மீண்டும் நிலையை வந்தடையும். முன்னதாக காலை 5 மணிக்கு விநாயகர் தேர் வடம் பிடித்து இழுக்கப்படும்.

ஆழித் தேரோட்டத்தையொட்டி திருவாரூர் மாவட்டத்துக்கு இன்று உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது. மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் மருத்துவ குழுக்களும் நியமிக்கப்பட்டுள்ளன.

காவல் துறை சார்பில் 1,500போலீஸார் பாதுகாப்புப் பணியில்ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும்நான்கு வீதிகளிலும் 50 தற்காலிககண்காணிப்பு கேமராக்கள், 45நடமாடும் கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் 5 ட்ரோன் கண்காணிப்பு கேமராக்கள் மூலம் காவல் துறையினர் கண்காணிப்புபணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தஞ்சை, கும்பகோணம், மன்னார்குடி, பட்டுக்கோட்டை, நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து திருவாரூருக்கு இன்று சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

விழாவில், அமைச்சர்கள் பி.கே.சேகர்பாபு, அர.சக்கரபாணி, ஆட்சியர் சாரு, வேளாக்குறிச்சி ஆதீனம் சத்திய ஞானமகாதேவ பரமாச்சாரிய சுவாமிகள் உள்ளிட்டோர் கலந்துகொள்கின்றனர்.