பிளாஸ்டிக் தடையை விரிவுபடுத்தியும், இதை வெற்றிகரமாக செயல்படுத்த மாசு கட்டுப்பாட்டு வாரியம் உள்ளிட்ட துறைகளைக் கொண்ட மக்கள் இயக்கம் தொடங்கப்படும் என்று சுற்றுச்சூழல் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பிளாஸ்டிக் தடையை விரிவுபடுத்தியும், இதை வெற்றிகரமாக செயல்படுத்த மாசு கட்டுப்பாட்டு வாரியம் மூலம் பல்வேறு துறைகளை உள்ளடக்கிய “மக்கள் இயக்கம்” தொடங்க உள்ளதாகவும் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு கடந்த 2019ஆம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி முதல் 14 வகையான ஒருமுறைப் பயன்படுத்தி தூக்கி எறியும் பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி, சேமிப்பு, போக்குவரத்து விற்பனை மற்றும் விநியோகம் ஆகியவற்றிற்கு தடையை கொண்டு வந்தது. இருப்பினும், அதனை திறம்பட செயல்படுத்த வில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், பிளாஸ்டிக் தடை வெற்றிபெற மேலும் விரிவான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் இதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் வர்த்தக சங்கங்கள், சமூக மன்றங்கள், வணிகர் சங்கங்கள், குடிமக்கள் அமைப்புகள், இவைகளின் பங்குதாரர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் போன்ற பல்வேறு துறைகள் மூலமாக மக்கள் இயக்கம் ஒன்றை தொடங்க இருப்பதாகவும் இதன் தொடர்ச்சியாக மாவட்ட ஆட்சியர்களின் ஆதரவுடனும், வழிகாட்டுதலுடன் பிளாஸ்டிக் தடை கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும் எனவும் கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் பிளாஸ்டிக் கழிவுகள் மேலாண்மை விதிகளின் அடிப்படையில், ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எரியப்படும் பிளாஸ்டிக் பொருட்களான 100 மைக்கிரான்களுக்கு குறைவான பிளாஸ்டிக் பேனர்கள், தட்டுகள், கோப்பைகள் உள்ளிட்டவை 01.07.2022 முதல் பயன் படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் 75 மைக்கிரான் தடிமனுக்கு கீழ்வுள்ள பிளாஸ்டிக் கை பை மற்றும் 60 கிராம் அளவிற்கு கீழ் நெய்யப்படாத பிளாஸ்டிக் பைகள் 30.09.2021 முதலும், 120 மைக்கிரான் தடிமனுக்கு கீழ்வுள்ள பிளாஸ்டிக் கைப்பைகள் 31.12.2022 முதலும் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.