மணிப்பூர் மாநிலத்தின் வளர்ச்சிக்காக அடுத்த 25 ஆண்டுகளுக்கான சிறப்பான அடித்தளத்தை பாஜக அமைத்துக் கொடுத்துள்ளது என்று தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.

மணிப்பூர் சட்டப்பேரவைக்கு வரும் 28 மற்றும் மார்ச் 5-ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடக்க உள்ளது. இதை முன்னிட்டு தலைநகர் இம்பாலில் நேற்று நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் நரேந்திர மோடி பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:

மணிப்பூர் மாநிலம் உருவாகி கடந்த மாதம் 50 ஆண்டுகள் நிறைவடைந்தது. கடந்த பல ஆண்டுகளாக மணிப்பூர் மாநிலம் பல அரசாங்கங்களை கண்டுள்ளது. பல வருடங்கள் காங்கிரஸ் ஆட்சிக்குப் பிறகு, மணிப்பூரில் சமத்துவமின்மை மட்டுமே இருந்தது. ஆனால், கடந்த 5 ஆண்டுகளில், இரட்டை இன்ஜின்கள் பொருத்தப்பட்ட வாகனம்போல வேகமாக செயல்படும் பாஜக அரசு, மணிப்பூரின் ஒட்டுமொத்த வளர்ச்சியை நோக்கி உழைத்தது. பாஜகவின் நல்லாட்சியையும், நல்ல நோக்கத்தையும் பார்த்திருப்பீர்கள்.

கடந்த 5 ஆண்டுகளில் பாஜகவின் நல்லாட்சியால், அடுத்த 25 ஆண்டுகளுக்கான சிறப்பான அடித்தளத்தை அமைத்து கொடுத்துள்ளது. மணிப்பூரின் அடுத்த 25 ஆண்டுகளை இப்போது நடக்கவிருக்கும் சட்டமன்ற தேர்தலின் முடிவுகள் தீர்மானிக்கும். எனவே, மணிப்பூரின் எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டு மாநிலம் வளர்ச்சி பெற பாஜகவுக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும். கடந்த 5 ஆண்டுகளில் பாஜக அரசால் மாநிலத்தில் ஏற்படுத்தப்பட்ட நிலைத்தன்மை மற்றும் அமைதி ஆகியவற்றை நீடித்து நிலைக்க செய்ய வேண்டும். அதற்கு முழு பெரும்பான்மை பெற்ற பாஜக அரசு அமைய வேண்டியது அவசியம்.

சொன்னதை செய்தோம்..

பாஜக அரசு செய்ய முடியாத விஷயங்களை செய்து காட்டியுள்ளது. காங்கிரஸ் கட்சி மணிப்பூரின் முன்னேற்றத்துக்கான விஷயங்களில் எப்போதும் கவனம் செலுத்தியதில்லை. ஆனால், நாங்கள் சொன்னதை செய்தோம். எனவே, மக்கள் குறிப்பாக முதல் முறை வாக்களிக்கும் இளம் தலைமுறை வாக்காளர்கள் பாஜகவை ஆதரிக்க வேண்டும்.

இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.