உத்தர பிரதேசத்தில் மீண்டும் பாஜக முதல்வரான யோகி ஆதித்யநாத்துக்கு வாழ்த்து கூற அவரது வீட்டுக்கு சென்றார் சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் சிங்கின் சித்தப்பா ஷிவ்பால் சிங் யாதவ்.

அப்போது, உ.பி. தேர்தலில் தனது சகோதரர் மகனும் சமாஜ் வாதி தலைவருமான அகிலேஷ் சிங்குடன் தன்னுடைய பிரகதிஷீல் சமாஜ்வாதி கட்சி – லோகியாவை (பிஎஸ்பிஎல்) கூட்டணி வைத்தார். நூறு தொகுதிகள் கேட்டும் ஒரே ஒரு தொகுதியை அகிலேஷ் ஒதுக்கியது, மகன் ஆதித்யா சிங் யாதவுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்க மறுத்தது போன்ற பல விஷயங்களை கூறி ஷிவ்பால் வருத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து கடும் அதிருப்தி யில் உள்ள ஷிவ்பால் சிங்கை தங்கள் பக்கம் இழுக்க பாஜக திட்டமிட்டுள்ளது.

அதன்படி, உ.பி.யில் யாதவ் வாக்குகளை பிரிக்க பல்வேறு வியூகங்கள் அமைக்கிறது பாஜக.அதற்காக அகிலேஷின் சித்தப்பாஷிவ்பாலுக்கு துணை சபாநாயகர்பதவி அளிப்பது அல்லது மாநிலங்களவை எம்.பி. பதவி வழங்குவது அல்லது மத்திய அமைச்சர் பதவிவழங்குவது, ஆஸம்கர் மக்களவைஇடைத்தேர்தலில் பாஜக வேட்பாளராக்குவது, அவருடைய மகன் ஆதித்யாவை எம்எல்ஏ.வாக்குவது என பல்வேறு திட்டங்கள் தயாராகி உள்ளது.

கூடுதல் எம்எல்ஏக்கள்

இந்த முறை கூடுதலாக 111 எம்எல்ஏ.க்களை பெற்ற அகிலேஷ், தனது ஆஸம்கர் எம்.பி. பதவியை ராஜினாமா செய்து கர்ஹாலின் எம்எல்ஏ.வாகத் தொடர்கிறார். இதன்மூலம், தீவிர எதிர்க்கட்சி தலைவராக அகிலேஷ் இருப்பார். அவரை சமாளிக்க எதிர்க்கட்சிகள் வகிக்கும் துணை சபாநாயகர் பதவியை ஷிவ்பாலுக்கு அளிக்க பாஜக திட்டமிட்டுள்ளது.

அதை ஷிவ்பால் ஏற்க மறுத்தால் அவருக்கு மாநிலங்களவை எம்.பி. பதவி வழங்குவது, அவரது மகன் ஆதித்யா சிங் யாதவை இடைத்தேர்தல் அல்லது மேல் சபை மூலமாக அமைச்சர் பதவியும் அளிப்பது என்று திட்ட மிட்டுள்ளனர்.

ஒருவேளை ஷிவ்பால் மாநிலங்களவை எம்.பி.யானால், அவர்6-வது முறை எம்எல்ஏ.வாகஇருக்கும் ஜஸ்வந்த் நகர் காலியாகும். இதற்கான இடைத்தேர்தலில் அவரது மகன் ஆதித்யா போட்டியிடலாம். ஷிவ்பாலிடம் அவரதுகட்சியை பாஜக.வில் இணைக்கவும் பேச்சுவார்த்தை நடைபெறுவதாக ஒரு தகவல் கசிகிறது. இது நடந்தால் அகிலேஷால் காலியான ஆஸம்கர் மக்களவை இடைத்தேர்தலில் ஆதித்யா அல்லது ஷிவ்பால் பாஜக சார்பில் போட்டியிடவும் வாய்ப்புகள் உள்ளன.