பிராட்வே பேருந்து நிலையத்தை வணிக வளாகங்களுடன் கூடிய போக்குவரத்து முனையமாக மாற்றும் திட்டத்திற்கு சென்னை மாநகராட்சி விரிவான சாத்தியக் கூறு தயார் செய்ய உள்ளது.

சென்னை மெட்ரோ ரயில் முதல் கட்ட திட்டம் 54.1 கி.மீ தொலைவுக்கு விம்கோ நகர் முதல் சென்னை விமான நிலையம் வரை, சென்ட்ரல் முதல் பரங்கிமலை வரை என இரண்டு வழித்தடங்களில் முழுமையாக செயல்பாட்டில் உள்ளன. இந்நிலையில், 2-வது கட்ட மெட்ரோ பணிகள் மிக வேகமாக நடைபெற்று வருகிறது. ரூ.69,180 கோடி செலவில், 118.9 கிலோ மீட்டர் நீளத்துக்கு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில், மெட்ரோ ரயில் நிலையங்களுடன் அனைத்து வகையான போக்குவரத்து வசதிகளையும் இணைக்கும் வகையில் ‘மல்டி மாடல் இன்டகிரேஷன்’ என்ற போக்குவரத்து முனையங்களை அமைக்கும் பணியை சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம் மேற்கொண்டு வருகிறது. இதன்படி மெட்ரோ ரயில் முதல் கட்ட திட்டத்தில் கிண்டி மற்றும் வண்ணாரப்பேட்டையில் மல்டி மாடல் இன்டகிரேஷன் என்று அழைக்கப்படும் ஒருங்கிணைந்த போக்குவரத்து முனையங்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் 12 இடங்கள் மல்டி மாடல் இன்டகிரேஷன் அமைக்கப்படவுள்ளது.

இதன் தொடர்ச்சியாக, சென்னை பிராட்வே பேருந்து நிலையத்தில் மல்டி மாடல் இன்டகிரேஷன் திட்டத்தை செயல்படுத்த சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் இந்த திட்டத்திற்கான விரிவான சாத்தியக் கூறு அறிக்கையை சென்னை மாநகராட்சி தயார் செய்ய உள்ளது. இது தொடர்பாக சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், “பிராட்வே பேருந்து நிலையம் உள்ள இடத்தில் வணிக வளாகம், பேருந்து நிலையம், பார்கிங் வசதிகளுடன் கூட மல்டி மாடல் முறையிலான பேருந்து நிலையம் அமைய உள்ளது. இது தொடர்பாக சாத்தியக் கூறு அறிக்கையை தயார் செய்வதற்கான ஆலோசகர்களை தேர்வு செய்வதற்கான டெண்டர் கோரப்பட்டுள்ளது. டெண்டர் அளித்த பிறகு பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு இந்த அறிக்கை தயார் செய்யப்படும்.

முன்னதாக, பிராட்வே பேருந்து நிலையத்தை ரூ.900 கோடி செலவில் 21 மாடிகள் வணிக வளாகத்துடன் கொண்ட பேருந்து நிலையமாக மாற்ற முடிவு செய்யப்பட்டது. இதில், கீழ் தளத்தில் 53 மற்றும் கீழ் தரை 44 பேருந்துகளும், அடுத்த 2 தளங்களில் இரு மற்றும் நான்கு சக்கர பார்கிங் வசதி அமைக்க முடிவு செய்யப்பட்டது. மீதம் உள்ள தளங்கள் வணிக வளாகமாக பயன்படுத்த திட்டமிடப்பட்டது. இது பல ஆண்டுகளுக்கு முன்பு தயார் செய்யப்பட்ட திட்டம் என்பதால் தற்போது புதிதாக சாத்தியக் கூறு அறிக்கை தயார் செய்யப்படவுள்ளது” என்று அவர்கள் கூறினர்.