3 முறை எச்சரித்த பிறகும் பேருந்து படிக்கட்டில் தொங்கிக் கொண்டு பயணம் செய்யும் மாணவர் மீது வழக்குப்பதிவு செய்து மாற்றுச் சான்றிதழ் வழங்க பரிந்துரைக்கப்படும் என ஆரணி காவல் துணை கண்காணிப்பாளர் கோட்டீஸ்வரன் எச்சரித்துள்ளார்.

தி.மலை மாவட்டத்தில் இயக்கப்படும் அரசுப் பேருந்துகளின் படிக்கட்டில் தொங்கியபடி பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் பயணம் செய்வது வாடிக்கையாக உள்ளது. மேலும், பேருந்து பின்பக்கத்தில் உள்ள ஏணி மற்றும் பேருந்து மீது ஏறிக் கொண்டும் பயணம் செய்கின்றனர். இதனால் விபத்து ஏற்பட்டு உயிரிழப்பு நிகழுக்கூடிய அபாயம் உள்ளன. காவல்துறை, போக்குவரத்து துறையினர் முயற்சிகளை மேற்கொண்டும், ‘படிக்கட்டு பயணம்’ தொடர்கிறது.

இது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் ஆரணியில் நேற்று முன்தினம் நடை பெற்றது. வட்டார போக்குவரத்து அலுவலர் சரவணன் தலைமை வகித்தார். ஆரணி காவல் துணை கண்காணிப்பாளர் கோட்டீஸ்வரன் பேசும்போது, “பேருந்து படிக்கட்டில் தொங்கியபடி மாணவர்கள் பயணிப்பது நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது. படிக்கட்டில் தொங்கிக்கொண்டு பயணம் செய்ய மாணவர்களை அனுமதிக்க வேண்டாம். ஓட்டுநர், நடத்துநர் மற்றும் பயணிகளிடம் தகராறு செய்யும் மாணவர்கள் குறித்து காவல்துறைக்கு புகார் தெரிவிக் கலாம்.

படிக்கட்டில் பயணம் செய்வதால் ஏற்படும் ஆபத்து குறித்து, பள்ளி மற்றும் கல்லூரிகளில் விழிப்புணர்வு கூட்டம் நடத்த வேண்டும். அக்கூட்டத்துக்கு மாணவர்களின் பெற்றோரையும் அழைக்க வேண் டும். அதிக எண்ணிக்கையில் தொங்கியபடி மாணவர்கள் பயணம் செய்யும் வழித்தடத்தில் கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும். பேருந்து நிலையத்தில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படும்.

பேருந்து படிக்கட்டில் தொங்கிக் கொண்டு பயணம் செய்யும் மாணவர்களுக்கு 3 முறை எச்சரிக்கை விடுக்கப்படும். அதன்பிறகும் பேருந்து படிக்கட்டில் தொங்கிக்கொண்டு பயணம் செய்தால், மாணவர் மீது காவல்துறை மூலம் வழக்குப்பதிவு செய்யப்படும். மேலும், அவருக்கு மாற்று சான்றிதழ் வழங்கவும் கல்வி நிறுவனங்களுக்கு பரிந்துரை செய்யப் படும்” என்றார்.