சிபிஎஸ்இ 12-ம் வகுப்புப் பொதுத்தேர்வு முடிவுகள் இன்று பிற்பகல் 2 மணியளவி்ல வெளியாகிறது.

இந்தியாவில் கரோனா வைரஸ் 2-வது அலை தீவிரமாகப் பரவியதையடுத்து 12ஆம் வகுப்புப் பொதுத்தேர்வை சிபிஎஸ்இ நிர்வாகம் ரத்து செய்தது.

அதில், மாணவர்களின் 12ஆம் வகுப்பில் நடந்த தேர்வுகளில் இருந்து 40% மதிப்பெண்கள், 10 மற்றும் 11ஆம் வகுப்பில் நடந்த தேர்வுகளில் இருந்து தலா 30% மதிப்பெண்களை எடுத்து மொத்த மதிப்பெண்கள் கணக்கிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இறுதி மதிப்பெண் கணக்கிட்டு பதிவேற்றம் செய்யும் பணிகள் முடிவடைந்தன.

மாணவர்கள், தங்களின் உயர்கல்வி சேர்க்கையில் சிரமங்களை எதிர்கொள்ளாமல் இருக்கும் பொருட்டு, சாத்தியமான வகையில் குறைந்தபட்ச காலத்துக்குள் விரைவாகத் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்றும் சிபிஎஸ்இ சார்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

ஜூலை 31ஆம் தேதி அன்று தேர்வு முடிவுகள் வெளியிடப்படலாம் எனத் தகவல் வெளியாகி இருந்தது.
இந்தநிலையில் 12ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகும் என சிபிஎஸ்இ நிர்வாகம் தெரிவித்துள்ளது. இன்று பிற்பகல் 2 மணியளவில் பிளஸ் 2 சிபிஎஸ்இ முடிவுகள் அறிவிக்கபடவுள்ளது.

10 ,12ஆம் வகுப்புத் தனித் தேர்வர்களுக்கு ஆகஸ்ட் 16 முதல் செப்டம்பர் 15ஆம் தேதிக்குள் பொதுத்தேர்வு அனைத்து வழிகாட்டு நெறிமுறைகளையும் பின்பற்றி நடத்தப்படும் என சிபிஎஸ்இ ஏற்கெனவே அறிவித்துள்ளது.

12ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றாலும், தங்களின் மதிப்பெண்களை உயர்த்திக்கொள்ள விரும்பும் மாணவர்கள், தனித் தேர்வர்களாகக் கருதப்பட்டு, இந்த தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர் என சிபிஎஸ்இ தெரிவித்து இருந்தது.