தமிழக வனப் பகுதிகளை ஆக்கிரமித்துள்ள அந்நிய மரங்களை அகற்றுவதற்கு, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட நிதியைப் பயன்படுத்த வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் வனப் பகுதிகளை ஆக்கிரமித்துள்ள அந்நிய மரங்களை அகற்றுவது தொடர்பான வழக்கு, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் வி.பாரதிதாசன், என்.சதிஷ்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

மத்திய அரசு மறுப்பு

அப்போது, மேற்குத் தொடர்ச்சி மலையில் வளர்ந்துள்ள அந்நிய மரங்களை அகற்றுவதற்கு, 100 நாள் வேலைத் திட்டமான மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட நிதியைப் பயன்படுத்த முடியாது என்று மத்திய அரசு மறுப்புத் தெரிவித்துள்ளதாக தமிழக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ஆனால், அந்நிய மரங்களை அகற்றும் பணி, 100 நாள் வேலை உறுதித் திட்டத்தில் சேர்க்கப்படவில்லை என்று மத்திய அரசு விளக்கம் அளித்தது.

இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், வனப் பகுதிகளில் உள்ள அந்நிய மரங்களை அகற்ற, மத்திய அரசின் மகாத்மா காந்தி தேசியஊரக வேலை உறுதித் திட்ட நிதியைப் பயன்படுத்தவும், 100 நாள் வேலை உறுதித் திட்டத்தில் இப்பணிகளை சேர்க்கவும், இப்பணிகளில் பழங்குடியினரை ஈடுபடுத்தவும் மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டுள்ளனர்.