சென்னை மெட்ரோவில் கடந்த 9 மாதங்களில் மட்டும் 4 கோடி பயணங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சென்னை மெட்ரோ ரயில் தொடங்கி கடந்த 7 ஆண்டுகளில் நடப்பு ஆண்டில்தான் (2022) அதிகம் பயணங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சென்னை மெட்ரோ ரயில் முதல் கட்ட திட்டம் 54.1 கி.மீ தொலைவிற்கு விம்கோ நகர் முதல் சென்னை விமான நிலையம் வரை, சென்ட்ரல் முதல் பரங்கிமலை வரை என இரண்டு வழித்தடங்களில் முழுமையாக செயல்பாட்டில் உள்ளது. இந்த வழித்தடங்களில் தினசரி பயணம் செய்யும் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே உள்ளது. குறிப்பாக, கரோனா தொற்றுக்குப் பிறகு இந்த ஆண்டு மெட்ரோ ரயிலில் பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை உயர்ந்துகொண்டே வருகிறது. இதன்படி சென்னை மெட்ரோ ரயில் இந்த ஆண்டு மட்டும் 4 கோடி பயணங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மாத வாரியாக…

  • ஜனவரி – 25,19,252
  • பிப்ரவரி – 31,86,683
  • மார்ச் – 44,67, 756
  • ஏப்ரல் – 45,46,330
  • மே – 47,87,846
  • ஜூன் – 52,90,390
  • ஜூலை – 53,17,659
  • ஆகஸ்ட் – 56,66,231
  • செப்டம்பர் – 61,12,906

சென்னை மெட்ரோ ரயிலில் கடந்த 7 மாதங்களில் மட்டும் 4,18,95,023 பயணங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஆகஸ்ட் மாதத்தை விட செப்டம்பர் மாதத்தில் 4,98,395 பயணங்கள் கூடுதலாக மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஜூலை மாதம் மேற்கொண்ட பயணங்களில் 16,11,440 என்ற எண்ணிக்கையில் க்யூஆர் கோடு மூலமும், 32,81,792 என்ணிக்கையில் பயண அட்டை மூலம் பயணம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறிப்பாக, 7 ஆண்டுகளுக்கு பிறகு சென்னை மெட்ரோ ரயில் பயணங்களின் எண்ணிக்கை புதிய உச்சத்தை அடைந்துள்ளது. கடந்த 2019-ம் ஆண்டு சென்னை மெட்ரோ ரயிலில் 3.13 கோடி பயணங்கள் மேற்கொள்ளப்பட்டது. இதை விட ஒரு கோடிக்கும் அதிகமான பயணங்கள் இந்த ஆண்டில் 9 மாதங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

  • 2015 – 26.34 லட்சம்
  • 2016 – 36.37 லட்சம்
  • 2017 – 73.99 லட்சம்
  • 2018 – 1.48 கோடி
  • 2019 – 3.13 கோடி
  • 2020 – 1.18 கோடி
  • 2021 – 2.54 கோடி
  • 2022 – 4.18 கோடி

எனவே, இந்த ஆண்டு இறுதியில் பயணிங்களின் புதிய சாதனையை சென்னை மெட்ரோ ரயில் படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.