செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் கலந்துகொள்ள பிரதமர் மோடி வருவதையொட்டி, சென்னையில் 22,000 காவல் அதிகாரிகள் மற்றும் ஆய்வாளர்களுடன் 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுநாள் (ஜூலை 28) நேரு உள் விளையாட்டரங்கில் நடைபெறும் 44-வது செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் கலந்து கொள்கிறார். இதனைத் தொடர்ந்து 29-ம் தேதி அண்ணா பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்கிறார். இதனையொட்டி சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தலைமையில், அனைத்துக் காவல் அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இதன்படி, காவல் ஆணையர் தலைமையில் 4 கூடுதல் ஆணையர்கள், 7 இணை ஆணையர்கள் மற்றும் காவல் துறை துணைத் தலைவர்கள், 26 துணை ஆணையர்கள் மற்றும் காவல் கண்காணிப்பாளர்கள், சட்டம் – ஒழுங்கு, குற்றப்பிரிவு, போக்குவரத்து மற்றும் சிறப்பு பிரிவு காவல் ஆய்வாளர்கள், ஆயுதப்படை, கமாண்டோ, தமிழ்நாடு சிறப்பு காவல் படை காவல் ஆய்வாளர்கள் உள்பட 22,000 காவல் அதிகாரிகள் மற்றும் ஆய்வாளர்களுடன் 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நிகழ்ச்சிகள் நடைபெறும் ஜவஹார்லால் நேரு உள் விளையாட்டரங்கம், அண்ணா பல்கலைக்கழகம், தங்குமிடமான கிண்டி ஆளுநர் மாளிகை, சென்னை விமான நிலையம், அடையாறு கடற்படைத் தளம் ஆகிய இடங்களிலும், அதன் சுற்றுப்புறங்களிலும், சென்னையில் செல்லும் வழித்தடங்களிலும், பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு, தீவிர சோதனைகள் மற்றும் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சென்னையில் உள்ள லாட்ஜுகள், தங்கும் விடுதிகள், நட்சத்திர ஓட்டல்கள் மற்றும் விடுதிகளிலும் சோதனைகள் மேற்கொண்டு சந்தேக நபர்கள் மற்றும் அந்நிய நபர்கள் உள்ளனரா என கண்காணிக்கப்பட்டு வருகிறது. இது தவிர்த்து முக்கிய ரயில் நிலையங்கள், பேருந்து முனையங்களிலும் காவல் துறையினர் மூலம் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

மேலும், 28 மற்றும் 29 ஆம் தேதிகளில் சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ட்ரோன்கள் மற்றும் ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.