சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆருத்ரா தரிசன விழாவை முன்னிட்டு தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஆயிரகணக்கான பக்தர்கள் கலந்து தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

தமிழகத்தில் பிரசித்தி பெற்ற வழிபாட்டு தலங்களில் ஒன்று சிதம்பரம் நடராஜர் கோயில்.
பஞ்ச பூத தலங்களில் ஆகாய தலமாக விளங்கும் இந்த கோவிலில் ஆண்டுதோறும் 6 மகா அபிஷேகம் நடைபெறுவது வழக்கம். அதில், வருடம்தோறும் நடைபெறும் ஆனி மாதம் ஆனித் திருமஞ்சன தரிசன விழாவும், மார்கழி மாதம் ஆருத்ரா தரிசன விழாவும் மிகவும் பிரசத்திபெற்றவையாகும்.

ஆருத்ரா என்பது திருவாதிரை நட்சத்திரத்தை குறிக்கும் ஆருத்ரா தரிசனமாகும். சேந்தனார் வீட்டுக்கு சிவன் பெருமான் களி உண்ண சென்ற தினம் மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரம் ஆகும். அதனால் இந்த நாளையே ஆருத்ரா தரிசன விழாவாக கொண்டாடப்படுவதாக புராணங்களில் கூறப்படுகிறது.

இந்த உற்சவத்தின் போதும் மூலவராகிய ஆனந்த நடராஜமூர்த்தி, சிவகாம சுந்தரி அம்பாளுடன் உற்சவராக தேரில் எழுந்தருளி வலம் வருவார். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்வார்கள்.

அதன்படி நடராஜர் கோவிலில் இந்தாண்டுக்கான மார்கழி மாத ஆருத்ரா தரிசன திருவிழா கடந்த 28-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
விழாவையொட்டி தினமும் காலை, மாலை பல்வேறு வாகனங்களில் பஞ்சமூர்த்திகள் வீதி உலாவும், கடந்த 1-ந்தேதி தெருவடைச்சான் உற்சவமும் நடைபெற்றது.

விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று காலை 5 மணிக்கு தொடங்கியது. நடராஜர், சிவகாமசுந்தரி, விநாயகர், முருகர், சண்டிகேஸ்வரர் ஆகிய 5 சாமிகளின் தேர்கள் வீதிகளில் வலம் வருகிறது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு, சிவ சிவா கோஷத்துடன் தேரை வடம்பிடித்து இழத்து வருகின்றனர்.