சென்னை : மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (30.7.2021) சென்னை, இராயப்பேட்டை, ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் தமிழ்நாடு அமைப்புசாரா தொழிலாளர்கள் நல வாரியத்தின் சார்பில் 50,000 அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு 34 கோடியே 78 இலட்சத்து 88 ஆயிரத்து 950 ரூபாய்க்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.உடலுழைப்பு தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் பொருட்டு, முன்னாள் முதலமைச்சர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் 17.03.1999 அன்று தமிழ்நாடு உடலுழைப்பு தொழிலாளர்கள் சமூக பாதுகாப்பு நலவாரியம் உருவாக்கப்பட்டு, தொடர்ந்து 2006 முதல் 2011 வரையிலான ஆட்சிக் காலத்தில்  15 தனி நலவாரியங்கள் உருவாக்கப்பட்டன.

மேலும், அமைப்புசாரா தொழிலாளர்களின் நலனை கருத்தில் கொண்டு, பதிவு மற்றும் புதுப்பித்தலின் போது வசூலிக்கப்பட்ட கட்டணங்கள் 1.09.2006 முதல் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் முழுமையாக ரத்து செய்யப்பட்டது.அமைப்புசாரா தொழிலாளர்களின் சிரமங்களைக் கருத்தில் கொண்டு அவர்களுக்கு பதிவு செய்தல், புதுப்பித்தல் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்கு ஏதுவாக 01.11.2008 முதல் மாவட்டங்கள் தோறும் தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகங்கள் தொடங்கப்பட்டதுடன், 15.09.2009 முதல் இணையதளம் வாயிலாக  அமைப்புசாரா தொழிலாளர்கள் எளிய முறையில் பதிவு செய்யவும், புதுப்பிக்கவும் மற்றும் நலத்திட்ட உதவிகள் பெறுவதற்கு ஏதுவாகவும் வழிவகை செய்யப்பட்டது.

விழாவில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், 18 அமைப்புசாரா தொழிலாளர் நலவாரியங்களில் பதிவு செய்துள்ள 50,000 தொழிலாளர்களுக்கு, 10 கோடியே 69 இலட்சத்து 86 ஆயிரத்து 950 ரூபாய்க்கான திருமண நிதியுதவி, மகப்பேறு நிதியுதவி, கல்வி உதவித்தொகை, கண்கண்ணாடி, ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளையும், ஓய்வூதிய நிலுவைத் தொகையாக 24 கோடியே 9 இலட்சத்து 2 ஆயிரம் ரூபாயும், என மொத்தம் 34 கோடியே 78 இலட்சத்து 88 ஆயிரத்து 950 ரூபாய்க்கான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இவ்விழாவில், மாண்புமிகு உயர்கல்வித் துறை அமைச்சர் திரு.க. பொன்முடி, மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் திரு.மா. சுப்பிரமணியன், மாண்புமிகு இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் திரு.பி.கே. சேகர் பாபு, மாண்புமிகு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு.சி.வெ. கணேசன், நாடாளுமன்ற உறுப்பினர் திரு. தயாநிதிமாறன், சட்டமன்ற உறுப்பினர் திரு. உதயநிதி ஸ்டாலின், தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர் நலவாரியத் தலைவர் திரு. பொன். குமார், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை செயலாளர் திரு. கிர்லோஷ் குமார், இ.ஆ.ப., தொழிலாளர் ஆணையர் / முதன்மைச் செயலாளர் திரு. அதுல் ஆனந்த், இ.ஆ.ப., தொழிலாளர் நலத்துறை அலுவலர்கள், தொழிற்சங்கப் பிரதிநிதிகள் மற்றும் தொழிலாளர்கள் கலந்துகொண்டனர்.