சென்னை : மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (5.10.2021) தலைமைச் செயலகத்தில் உள்ள முதலமைச்சரின் தனிப் பிரிவிற்கு நேரில் சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள்,  முதலமைச்சரின் தனிப் பிரிவிற்கு மனு அளிக்க வந்திருந்த பொதுமக்களிடம் அவர்களது கோரிக்கைகளை கேட்டறிந்தார். மனுதாரர்களில் ஒருவர் காணாமல் போன தனது மகனை கண்டுபிடித்து தருமாறு கோரிக்கை வைத்தார். இம்மனு மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து, காணாமல் போன அப்பெற்றோரின் மகனை கண்டுபிடித்திட துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டார்.
    
மேலும், பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்த விவரங்களை கேட்டறிந்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், அனைத்து மனுக்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுத்து, தீர்வு காணப்படுவதை கண்காணித்து உறுதி செய்திட வேண்டும் என்றும், மனுதாரர்களுக்கு, மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து உரிய பதில்களை உடனுக்குடன் அளித்திட வேண்டும் என்றும் அலுவலர்களை அறிவுறுத்தினார்.