சிவகங்கை அரசு மருத்துவமனையில் குழந்தை இறந்து பிறந்த சம்பவத்தில் ரூ.3 லட்சம் இழப்பீடு வழங்க மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டது.

சிவகங்கையைச் சேர்ந்த வழக்கறிஞர் சத்யன். இவரது மனைவி ஜானகி பிரசவத்துக்காக 2013 செப்.27-ம் தேதி சிவகங்கை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இவருக்கு செப்.30-ம் தேதி குழந்தை இறந்த நிலையில் பிறந்தது. இதையடுத்து சத்யன், மருத்துவர்களின் அஜாக்கிரதையால் குழந்தை இறந்து பிறந்ததாக மாநில மனித உரிமை ஆணையத்தில் புகார் தெரிவித்தார். மேலும் அவர் சார்பில் வழக்கறிஞர் டி.எஸ்.சரவணன் ஆஜராகினார்.

இதையடுத்து சத்யன் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் ஜெயச்சந்திரன் உத்தரவிட்டார். இது குறித்து சத்யன் கூறியதாவது: நான் மருத்துவர்கள் கூறிய தேதி யிலேயே எனது கர்ப்பிணி மனைவியை மருத்துவமனையில் அனுமதித்தேன். குழந்தை நன்றாக இருப்பதாகக் கூறி வந்த மருத்துவர்கள், திடீரென இறந்து பிறந்ததாகக் கூறினர்.

இதுகுறித்து டீனிடம் கேட்டபோது, உரிய பதில் அளிக்கவில்லை. இதனால் மனித உரிமைகள் ஆணையத்தில் புகார் செய்தேன். குழந்தைகள் இறப்பு குறித்து அந்தந்த மாவட்டங்களில் ஆட்சியர்கள் தலைமையில் கூட்டம் நடக்கிறது. இதில் மருத்துவர்கள் மட்டும் பங்கேற்கின்றனர். ஆனால், அந்த கூட்டங்களில் குழந்தைகளை இழந்தவர்களும் பங்கேற்றால் தான் தீர்வு கிடைக்கும், என்றார்.