தூய்மை இந்தியா 2.0 திட்டம், அம்ருத் 2.0 திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொடங்கி வைத்தார்.

கடந்த 2014-ல் தூய்மை இந்தியா திட்டம், நகர்ப்புற மேம்பாட்டுக்காக கடந்த 2015-ல் நகர்ப்புற மாற்றம், புதுப்பித்தலுக்கான அடல் இயக்கம் (அம்ருத்) தொடங்கப் பட்டன. இவற்றின் இரண்டாம் கட்ட திட்டங்களை தூய்மை இந்தியா 2.0, அம்ருத் 2.0 என்ற பெயரில் பிரதமர் மோடி டெல்லியில் நேற்று தொடங்கி வைத்து பேசியதாவது:

திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத நாடாக இந்தியாவை உருவாக்க கடந்த 2014-ல் இருந்து தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் இதுவரை 10 கோடி கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன. தூய்மை ந்தியா 2.0 திட்டத்தின் மூலம் குப்பைகள் இல்லாத நகரங்களை உருவாக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அம்ருத் 2.0 திட்டத்தின் மூலம் அனைத்து நகரங்களிலும் கழிவுநீர் வசதி மேம்படுத்தப்படும்.சுத்தமான குடிநீர் விநியோகம் உறுதி செய்யப்படும்.

இந்த திட்டங்களின் வெற்றியை தேசத் தந்தை மகாத்மா காந்திக்கு சமர்ப்பிக்கிறேன். சமூகத்தில் ஏற்றத் தாழ்வுகளை களைய பாடுபட்ட அம்பேத்கர் வழியில் மத்திய அரசு நடக்கிறது. வளமான எதிர்காலத்தை தேடி கிராமங் களில் இருந்து ஏராளமான இளைஞர்கள் நகரங்களில் குடியேறுகின்றனர். அவர்களின் நகர வாழ்க்கை கடினமானதாக உள்ளது. அம்பேத் கர் வழிகாட்டுதலின்படி அவர்கள் வாழ்க்கை நிலையை மாற்ற நடவடிக்கை எடுக்கப்படு கிறது.

இன்றைய இளம் தலைமுறை யினர் தூய்மை இந்தியா திட்டத்தில் அர்ப்பணிப்பு உணர்வுடன் பங் கேற்றுள்ளனர். சிறு குழந்தை கள் கூட சாக்லேட் சாப்பிட்டுவிட்டு தாள்களை குப்பைத் தொட்டியில் போடுகின்றனர்.

நாடு முழுவதும் ஒரு நாளில் ஒரு லட்சம் டன் குப்பை சேகரமாகிறது. இதில் 70 சதவீத குப்பைகள் சேகரிக்கப்பட்டு மறு சுழற்சி செய்யப்படுகிறது. இதனை 100 சதவீதமாக உயர்த்த இலக்கு நிர்ணயித்துள்ளோம்.

டெல்லியில் நீண்டகாலமாக ஒரு குப்பை மலை உள்ளது. தூய்மை இந்தியா 2.0 திட்டத்தில் அந்த குப்பை மலை விரைவில் அகற்றப்படும். இதேபோல நாடு முழுவதும் நகரங்களில் உருவாகியுள்ள குப்பை மலைகள் காணாமல் போகும். இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.

அம்ருத் 2.0 திட்டத்தி்ல் 4,700 நகர்ப்புற உள்ளாட்சிகளில் 100 சதவீத வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தூய்மை இந்தியா 2.0 திட்டத்தில் கழிவுநீர் மேலாண்மையை உறுதி செய்வது, திறந்தவெளியில் இயற்கை உபாதையை கழிக்காத நிலையை உருவாக்குவதுதொடர்பான திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.- பிடிஐ