சேலம்: சேலத்தில் இரண்டு நாள் முகாமிடும் முதல்வர் ஸ்டாலின், சேலம், நாமக்கல், தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய நான்கு மாவட்ட அரசு நிர்வாக செயல்பாடுகள், சட்டம், ஒழுங்கு மற்றும் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து நேரடியாக ஆய்வு மேற்கொள்கிறார்.

‘கள ஆய்வில் முதல்வர்’: தமிழக முதல்வர் ஸ்டாலின் மண்டல வாரியாக மாவட்டங்களில் செயல்படுத்தப்படும் அரசு திட்டங்களின் தற்போதைய நிலை குறித்து நேரில் ஆய்வு செய்வதற்காக, ‘கள ஆய்வில் முதல்வர்’ என்ற திட்டத்தை தொடங்கியுள்ளார். முதல்கட்டமாக வேலூர் மண்டலத்துக்கு உட்பட்ட வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் அரசு நிர்வாக செயல்பாடுகள், வளர்ச்சி பணிகள் குறித்து ஆய்வு செய்தார்.

சேலத்தில் முகாமிடும் முதல்வர்: தொடர்ந்து இரண்டாம் கட்டமாக சேலம் மண்டலத்துக்கு உட்பட்ட சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல் ஆகிய நான்கு மாவட்டங்களில் ‘கள ஆய்வில் முதல்வர்’ திட்ட நிகழ்ச்சி நாளை (புதன்கிழமை) சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறுகிறது. இதில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடக்கும் சட்டம், ஒழுங்கு ஆய்வு கூட்டம் நடக்கிறது. இதில் நான்கு மாவட்ட ஆட்சியர்கள், சேலம் சரக டிஐஜி., மாநகர காவல் ஆணையர் நஜ்மல் ஹோடா மற்றும் நான்கு மாவட்ட எஸ்பி உள்ளிட்ட காவல் துறை அதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் சட்டம், ஒழுங்கு குறித்து ஆலோசனையில் ஈடுபடுகிறார்.

நாளை இரவு சேலத்தில் தங்கும் முதல்வர் ஸ்டாலின், நாளை மறுநாள் காலை சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் நடக்கும் அரசு துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டத்தை நடத்துகிறார். இதில் சேலம், நாமக்கல், தருமபுரி, மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர்கள் உள்பட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர். இதில் மாவட்டத்தில் நடைபெறும் வளர்ச்சி திட்டப்பணிகள், நிறைவுற்ற பணிகள், நலத்திட்ட உதவிகள், அரசின் சலுகை திட்டங்கள் குறித்து கலந்தாய்வில் முதல்வர் ஸ்டாலின் ஈடுபடுகிறார். மேலும், இனிவரும் நாட்களில் செய்ய வேண்டிய திட்டங்கள் குறித்து விரிவாக ஆலோசனை மேற்கொள்ளப்பட உள்ளது.

உச்சக்கட்ட பாதுகாப்பு ஏற்பாடு: சேலம் மாவட்டத்துக்கு முதல்வர் ஸ்டாலின் வருகையையொட்டி, மாவட்டம் முழுவதும் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக விமான நிலையத்தில் மாவட்ட வருவாய் துறை, தீயணைப்பு துறை, மருத்துவ துறை, காவல் துறை அதிகாரிகளுக்கான பாதுகாப்பு ஆலோசனை கூட்டம் நடந்தது. விமான நிலையத்தில் முதல்வர் வருகையை முன்னிட்டு, ஏற்படுத்த வேண்டிய பாதுகாப்பு பணிகள் மற்றும் கண்காணிப்பு பணிகளில் ஈடுபடுவது சம்பந்தமாக அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முதல்வர் ஸ்டாலின் இரண்டு நாட்கள் ஆய்வு கூட்டம் நடத்துவதை முன்னிட்டு, மாநகர காவல் துறையின் பாதுகாப்பு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. மாநகர காவல் ஆணையர் நஜ்மல் ஹோடா தலைமையில் மாநகர பகுதிகளிலும், மாவட்ட எஸ்பி சிவக்குமார் தலைமையில் மாவட்ட பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.