கோவை உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோயில் அருகே கடந்தஆண்டு அக்டோபரில் கார் சிலிண்டர் வெடித்து ஜமேஷா முபின்(28) என்பவர் உயிரிழந்தார். அவரது வீட்டில் வெடிகுண்டு தயாரிக்கப் பயன்படும் ரசாயனங்கள் கண்டறியப்பட்டன.

இந்த வழக்கை தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். இது தொடர்பாக இதுவரை 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து தடை செய்யப்பட்ட இயக்கங்களுக்கு ஆதரவானஆவணங்கள், லேப்டாப் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இந்த வழக்கில் தொடர்புடைய 7 பேரை போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி கோரி, பூந்தமல்லிதேசிய புலனாய்வு சிறப்பு நீதிமன்றத்தில் என்ஐஏ அதிகாரிகள் கடந்த 1-ம் தேதி மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிபதி இளவழகன், இந்த வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள முகமது அசாரூதீன்(23), பைரோஸ்(28), நவாஸ்(26), அப்சர்கான்(28), முகமது தவ்பீக் (25) உள்ளிட்ட 7 பேரை, மொத்தம் 7 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி அளித்து உத்தரவிட்டார்.

இதையடுத்து 7 பேரையும் என்ஐஏ அதிகாரிகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.

சென்னை, கோவை, குன்னூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு 7 பேரையும் அழைத்துச் சென்று விசாரித்தனர். விசாரணைக்குப் பிறகு 7 பேரையும் நேற்று பூந்தமல்லி என்ஐஏ சிறப்பு நீதிமன்றத்தில் என்ஐஏஅதிகாரிகள் ஆஜர்படுத்தினர். பின்னர் நீதிமன்ற உத்தரவின்படி 7 பேரும் மீண்டும் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.