கோவை முழு அடைப்புக்கு பாஜக தலைவர் அழைப்பு விடுக்கவில்லை என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் அண்ணாமலை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

கோவையில் பாஜக அறிவித்துள்ள முழு அடைப்பு போராட்டத்துக்கு தடை விதிக்கக் கோரி கோவையைச் சேர்ந்த தொழிலதிபர் வெங்கடேஷ் என்பவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், “சிலிண்டர் வெடித்த விபத்து தொடர்பாக ஏற்கெனவே 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த விவகாரம் தேசிய புலனாய்வு முகமையின் விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக கோவை மாவட்டத்தில் வரும் திங்கட்கிழமை பாஜக சார்பில் முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளது. பந்த் அன்று தங்களது கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களை அடைத்து வியாபாரிகள் பந்துக்கு ஆதரவு தருமாறு பாஜக நிர்வாகிகள் அழுத்தம் தருகின்றனர்.

இந்த விவகாரம் ஏற்கெனவே தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில், சிலிண்டர் வெடிப்பு விவகாரத்தில் மாநில அரசை குற்றம்சாட்டி பந்த் நடத்துவது தேவையற்றது. எனவே, வரும் திங்கட்கிழமை பாஜக சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ள முழு அடைப்பு போராட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும்” என்று அந்த மனுவில் கூறியுள்ளார்.

இந்த வழக்கு நீதிபதிகள் பரேஷ் உபாத்யாய், பரத சக்கரவர்த்தி அமர்வில் இன்று பிற்பகல் விசாரணைக்கு வந்தது. விசாரணையின்போது, கோவையில் முழு அடைப்புக்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அழைப்பு விடுக்கவில்லை என்றும், செய்தியாளர் சந்திப்பில் பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் சி.பி.ராதாகிருஷ்ணன் அறிவித்ததை மாநில தலைமை அங்கீகரிக்கவில்லை என்றும் அண்ணாமலை தரப்பில் பதில் அளிக்கப்பட்டது.

இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் அக்டோபர் 31-ம் தேதி பந்த் நடத்தினால் காவல் துறை சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம் என்று தெரிவித்து, எந்தவித இடைக்கால உத்தரவும் பிறப்பிக்காமல் விசாரணையை நவம்பர் 1-ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.