ரயில் தாமதமாக இயக்கப்பட்டதற்கு தங்கள் கட்டுப்பாட்டை மீறிய காரணங்களை நிரூபிக்க முடியாத பட்சத்தில், தாமதமாக ரயில்கள் இயக்கப்பட்டால் சேவைக் குறைபாட்டுக்கு பயணிகளுக்கு ரயில்வே இழப்பீடு தர வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் ரயில்வே துறைக்கு உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2016-ம் ஆண்டு ஒரு குடும்பத்தினர் ஜம்மு நகரிலிருந்து ஸ்ரீநகருக்கு ரயிலில் பயணம் மேற்கொள்ள இருந்தனர். ஆனால், 4மணிநேரம் ரயில் தாமதம் காரணமாக, வேறுவழியின்றி அதிகமான விலைக்கு வாடகை கார் பிடித்து ஸ்ரீநகர் சென்றனர். ஆனால், அங்கு இவர்கள் பயணம் செய்ய வேண்டிய விமானத்தையும் தவறவிட்டனர், ஸ்ரீநகர் தால் ஏரியில் படகு சவாரி செய் பதிவு செய்திருந்த முன்பதிவும் வீணானது.

இதையடுத்து, ரயில்வே துறையின் தேவையற்ற தாமதம், சேவைக் குறைபாட்டுக்கு தங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் எனக் கோரி மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் அந்தக் குடும்பத்தினர் வழக்குத் தொடர்ந்திருந்தனர். அந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிமன்றம், வாடகைக் கார் செலவிட்டதற்கு ரூ.15 ஆயிரம், படகுமுன்பதிவை தவறவிட்டதற்கு ரூ.10ஆயிரம், மனஉளைச்சல், வழக்குச் செலவு என தலா ரூ.5 ஆயிரம் என ரூ.30 ஆயிரம் வழங்க வடமேற்கு ரயில்வே துறைக்கு உத்தரவிட்டது.

இந்த தீர்ப்பை எதிர்த்து ரயில்வே துறை சார்பில் மாநில நுகர்வோர் தீர்ப்பாயம், தேசிய நுகர்வோர் தீர்ப்பாயத்தில் மேல்முறையீடு செய்தும் கீழ்நீதிமன்றம் அளித்த தீர்ப்பு உறுதி செய்யப்பட்டது. ஜம்முவிலிருந்து புறப்பட வேண்டிய ரயில் ஏன் தாமதமானது என்பதற்கு ரயில்வே துறை சார்பில் விளக்கம் கடைசிவரை அளிக்கவில்லை.

இந்நிலையில் ரயி்ல்வே துறை சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவின் விசாரணை நீதிபதி எம்ஆர் ஷா, அனிருத்தா போஸ் ஆகியோர் அமர்வில் நேற்று விசாரிக்கப்பட்டது. ரயில்வே தரப்பில் மத்திய கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஐஸ்வர்யா பாட்டி ஆஜராகினர்.

சொலிசிட்டர் ஜெனரல் ஐஸ்வர்யா வாதிடுகையில் “ ரயில் தாமதமாகப் புறப்பட்டதற்கு சேவைக் குறைபாடு காரணம் என்று கூற முடியாது. ரயில்வே விதிகள் 114, 115ன்படி ரயில்கள் தாமதத்துக்கு இழப்பீடு வழங்க ரயி்ல்வே பொறுப்பாகாது.ரயில் தாமதமாக வருவதற்கும், புறப்படுவதற்கும் பல காரணங்கள் இருக்கும்”எ னத் தெரிவித்தார்.

இதையடு்த்து,நீதிபதிகள் அமர்வு 7 பக்கங்களில் கொண்ட தீர்ப்பை அளித்தனர்.

அதில் “ போட்டியும், நம்பகத்தன்மையும் தேவைப்படும் நாட்களாக இப்போது உள்ளன. பொதுத்துறை போக்குவரத்து நிலைத்திருக்க தனியார் நிறுவனங்களுடன் போட்டியிட வேண்டும். தங்களின் பணிக்கலச்சாரத்தையும், செயல்முறையையும் மேம்படுத்த வேண்டும். அதிகாரிகள், நிர்வாகத்தின் கருணையில் பயணிகள் இருக்க முடியாது.

ரயில் தாமதமாக இயக்கப்பட்டதற்கு எந்தவிதான ஆதாரங்களையும் ரயில்வேதரப்பி்ல் தெரிவிக்கவில்லை. ஜம்முவுக்கு ஏன் ரயில் தாமதமாக வந்தது என்பதற்கும் காரணம் இல்லை., ஏனென்றால் காரணங்கள் தங்கள் கட்டுப்பாட்டில் இல்லாதபோது, ரயில் தாமதமாக வந்தமைக்கும், புறப்பட்டதற்கும் ரயில்வே சரியான காரணத்தைக் கூறுவது அவசியம். குறைந்தபட்சம் ரயில் தாமதமாக வந்ததற்கு விளக்கம் அளிக்க வேண்டும், ஆனால், அதில் ரயில்வே தோல்வி அடைந்துவிட்டது.

ஒவ்வொரு பயணிக்கும் நேரம் விலைமதிப்பில்லாதது. அடுத்தடுத்த பயணத்துக்கு டிக்கெட் முன்பதிவு செய்திருப்பார்கள். இந்த வழக்கில்கூட ஜம்முவில் இருந்து ஸ்ரீநகர் சென்று அங்கிருந்து விமானம் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்திருந்தார்கள்.

ரயில் தாமதமாக இயக்கப்பட்டதற்கு எந்தவிதமான காரணமும், ஆதாரமும் இல்லாதநிலையில், தங்கள் கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்டு ரயில்தாமதமாக வந்ததை நிரூபிக்காதநிலையில், ரயில் தாமதத்தை நியாயப்படுத்தாத நிலையில், ரயில் தாமதமாக வந்தமைக்கு பயணிக்கு இழப்பீடு தருவதற்கு ரயில்வே கடமைப்பட்டுள்ளது. ஆதலால் ரயில்வேதுறையின் மனுவை தள்ளுபடி செய்கிறோம்

இவ்வாறு நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.