ரயில் நிலைய மேம்பாட்டுக் கட்டணமாக பயணிகளின் டிக்கெட்டில் ரூ.10 முதல் ரூ.50 வரை வசூலிக்க ரயில்வே வாரியம் முடிவு செய்துள்ளது. இதனால் தொலைதூர ரயில் பயணங்களுக்கான கட்டணம் உயரும் எனத் தெரிகிறது.

நாடு முழுவதும் 50க்கும் மேற்பட்ட ரயில் நிலையங்கள் தனியார் பங்களிப்புடன் மேம்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது மேம்படுத்தப்பட்ட ரயில் நிலையங்கள் மற்றும் எதிர்காலத்தில் மேம்படுத்தப்படவுள்ள ரயில் நிலையங்களில் ஏறுவோர், இறங்குவோருக்கு இந்தக் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கட்டணத்துக்கு ரயில்நிலைய மேம்பாட்டுக் கட்டணம் (Station Development Fee SDF ) எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

டிக்கெட்டை முன்பதிவு செய்யும்போதே இந்தக் கூடுதல் கட்டணம் சேர்க்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விமான நிலையங்கள் மேம்பாட்டுக்கு விமானப் பயணிகளுக்கு கட்டணம் வசூலிக்கப்படுவதுபோல் ரயில் பயணிகளுக்கும் வசூலிக்கப்படும் என்ற அறிவிப்பு விமர்சனங்களை எழுப்பியுள்ளது.

இதன்படி, ஏசி வகுப்பில் பயணிப்போருக்கு ரயில்நிலைய மேம்பாட்டுக் கட்டணமாக ரூ.50ம், படுக்கை வசதி கொண்ட பெட்டியில் பயணிப்போருக்கு ரூ.25ம், முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளில் பயணிப்போருக்கு ரூ.10ம் வசூலிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரயில்நிலைய மேம்பாட்டுக் கட்டணத்தால் தொலைதூர ரயில் பயணம் செல்வோரின் கட்டணம் உயரும் எனத் தெரிகிறது.

உதாரணத்துக்கு சொல்ல வேண்டும் என்றால், ஒரு நபர், டெல்லியில் இருந்து மும்பை செல்ல ரயில் டிக்கெட் முன்பதிவு செய்தார். அவர் மேம்பாட்டில் உள்ள அந்த இரண்டு ரயில் நிலையங்களுக்குமே மேம்பாட்டுக் கட்டணத்தை வழங்க வேண்டும். இதனால் பயணக் கட்டணம் ரூ.100 வரை அதிகரிக்கும்.

ஒருவேளை அந்த நபர், கட்டணச் சுமையைக் குறைத்துக் கொள்ளும் வகையில் டெல்லி பிரதான ரயில் நிலையத்தில் இல்லாமல் புறநகரில் உள்ள ஒரு சிறிய ரயில் நிலையத்திலிருந்து மும்பைக்கு டிக்கெட் முன்பதிவு செய்தால் அவர் செல்லுமிடமான மும்பைக்கு என ஒரு ரயில் நிலையத்திற்காக மேம்பாட்டுக் கட்டணத்தை மட்டும் செலுத்தினால் போதும்.

புறநகர் ரயில்களில் பயணிப்போருக்கு இந்தக் கட்டணம் ஏதுமில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்ற, நடைபெறும் ரயில் நிலையங்களில் நடைமேடைக் கட்டணமும் கூடுதலாக ரூ10 வசூலிக்கப்படும்.