பொங்கலுக்கு கரும்பு வழங்காத திமுக அரசைக் கண்டித்து 2ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

இது குறித்து அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்,” சட்டமன்றப் பொதுத் தேர்தலின்போது நிறைவேற்ற முடியாத பல்வேறு வாக்குறுதிகளை அளித்து மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்த திமுக அரசு, மக்கள் அனைவரும் சொல்லொண்ணா துயரத்திற்கு ஆளாகும் வகையில் பல்வேறு செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருவது மிகுந்த வேதனைக்குரிய விஷயமாகும்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சிக் காலங்களிலும், எனது ஆட்சியிலும், ஆண்டுதோறும் தைப் பொங்கலை முன்னிட்டு, ஏழை, எளிய, நடுத்தர மக்கள் பொங்கல் திருநாளை சிறப்பாகக் கொண்டாடும் வகையில், சர்க்கரை, அரிசி, செங்கரும்பு, ரொக்கம் உள்ளிட்ட பொங்கல் பரிசுத் தொகுப்புகள் வழங்கப்படுவது வழக்கம். விவசாயப் பெருங்குடி மக்கள் இந்த திமுக ஆட்சியில் பல்வேறு துன்பங்களையும், துயரங்களையும் சந்தித்து வரும் இவ்வேளையில், 2023-ம் ஆண்டு தைப் பொங்கலை முன்னிட்டு தமிழக அரசின் சார்பில் வழங்கப்பட இருக்கும் பரிசுத் தொகுப்பில் செங்கரும்பை வழங்காமல் மக்களை ஏமாற்றியதோடு, அரசின் சார்பில் செங்கரும்பை கொள்முதல் செய்வார்கள் என்ற நம்பிக்கையில் விவசாயிகள் செங்கரும்பை விளைவித்துள்ள நிலையில், தற்போதைய அரசின் அறிவிப்பால் விவசாயப் பெருங்குடி மக்கள் மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அடைந்துள்ளனர்.

பொதுமக்களும், விவசாயப் பெருமக்களும் மிகுந்த வேதனை அடைந்துள்ள இச்சூழ்நிலையில், அரசின் சார்பில் வழங்க இருக்கும் பொங்கல் தொகுப்பு குறித்து, திமுக அரசின் அமைச்சர் எ.வ. வேலு செய்தியாளர்களிடம் பேசியபோது, வெல்லம், கரும்பு, முந்திரி போன்ற பொருட்களை வழங்கியபோது, அதன் தரம் குறித்து பல்வேறு புகார்கள் வந்ததால், இந்த ஆண்டு பொங்கல் தொகுப்பில் இதுபோன்ற பொருட்கள் வழங்கப்படவில்லை என பொறுப்பற்ற முறையில் பேசி இருக்கிறார். இதற்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்நிலையில், பொங்கல் பரிசுத் தொகுப்பில் செங்கரும்பை வழங்காமல் மக்களை ஏமாற்றியதோடு, செங்கரும்பு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை சிதைத்துள்ள திமுக அரசைக் கண்டித்தும், திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோது, பொங்கல் பரிசாக மக்களுக்கு 5,000/- ரூபாய் வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டபடி, தற்போது, அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் தலா 5,000/- ரூபாய் வழங்க வலியுறுத்தியும், விவசாயிகளிடமிருந்து செங்கரும்பை கொள்முதல் செய்து, மக்களுக்கு வழங்க வலியுறுத்தியும், அதிமுக விவசாயப் பிரிவின் சார்பில், வருகின்ற 2ம் தேதி திருவண்ணாமலை , அண்ணாசிலை அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

மக்களை பல்வேறு வகைகளில் வாட்டி வதைத்து வரும் திமுக அரசைக் கண்டித்து நடைபெற உள்ள இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், விவசாயப் பெருங்குடி மக்களும், பொதுமக்களும் பெருந்திரளான அளவில் கலந்துகொண்டு ஆதரவு நல்கிடுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.” இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.