கடமையைச் செய்யத் தவறுவதால் அரசுக்கு ஏற்படும் நிதி இழப்புக்கு சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளே பொறுப்பு என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

திருவாரூரை சேர்ந்த விஜயகுமாரி, திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கண் அறுவை சிகிச்சை செய்து கொண்டார். அறுவை சிகிச்சைக்குப் பின்னர், அவருக்கு பார்வை முற்றிலுமாக பறிபோனது. மருத்துவர்கள் அலட்சியம் காரணமாகவே பார்வை பறிபோனது. எனவே இழப்பீடு வழங்கக்கோரி திருவாரூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த திருவாரூர் நீதிமன்றம், பாதிக்கப்பட்ட விஜயகுமாரிக்கு ஐந்து லட்சம் ரூபாயை இழப்பீடாக மூன்று மாதங்களில் வழங்க கடந்த 2015-ம் ஆண்டு உத்தரவிட்டது.

நீதிமன்ற உத்தரவுப்படி தமக்கு இழப்பீடு வழங்காததால், அந்த உத்தரவை அமல்படுத்தக் கோரி திருவாரூர் நீதிமன்றத்தில் மீண்டும் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த திருவாரூர் நீதிமன்றம், இழப்பீடு வழங்காததால் திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள அசையும் சொத்துகளை ஜப்தி செய்ய கடந்த செப்டம்பர் மாதம் உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவ டீன் மற்றும் மாவட்ட ஆட்சியர் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, திருவாரூர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ஆறு ஆண்டுகளாக அமல்படுத்தாமல் இருந்த நிலையில் தற்போது மனுத்தாக்கல் செய்துள்ளது ஏற்றுக்கொள்ள முடியாது. பணியில் கவனக்குறைவாகவும், கடமையை செய்யத் தவறியதாலும் அரசுக்கு ஏற்பட்ட நிதி இழப்புக்கு, சம்பந்தப்பட்ட அதிகாரிகளே பொறுப்பு. எனவே அந்த தொகையை அரசு அதிகாரிகளிடமிருந்தே வசூலிக்க வேண்டும்.

பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஐந்து லட்சம் ரூபாய் இழப்பீட்டை ஜனவரி 10-ம் தேதிக்குள் வழங்க வேண்டும். அதுவரை மருத்துவமனை மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலக சொத்துகளை ஜப்தி செய்ய திருவாரூர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை நிறுத்தி வைக்க உத்தரவிட்டார். ஜனவரி 10-ம் தேதிக்குள் இழப்பீடு வழங்கவில்லை என்றால் சொத்துகளை ஜப்தி செய்யும் நடவடிக்கைகளை தொடர அனுமதியளித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.