சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞரும், சிறைக்கைதிகள் உரிமைகள் மைய இயக்குநருமான பி.புகழேந்தி தாக்கல் செய்திருந்த பொது நல மனுவில் கூறியிருப்பதாவது:

மதுரை மத்திய சிறையில் கைதிகளால் தபால் அனுப்புவதற்கான கவர்கள், அட்டைகள் போன்ற ஸ்டேஷனரிப் பொருட்கள், மருத்துவ உதவிப்பொருட்கள் தயாரிக்கப்பட்டு அவை பல்வேறு அரசு அலுவலகங்கள், மருத்துவமனைகள், நீதிமன்றங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவது போலவும், கைதிகளுக்கு சம்பளம் கொடுத்தது போலவும் போலியாக கணக்கு தயாரிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் கடந்த 2016 முதல் 2021 வரையிலான காலகட்டத்தில் சுமார் ரூ.100 கோடி வரை ஊழல் நடந்திருப்பது தகவல் அறியும் உரிமைச்சட்டம் மூலமாக தெரியவந்துள்ளது. உண்மையில் ஆயிரக்கணக்கில் பொருட்களை தயாரித்துவிட்டு லட்சக்கணக்கில் அவற்றை விற்றுள்ளதாக கணக்கு காட்டியுள்ளனர்.

இதில் சிறைத்துறை உயரதிகாரிகளுக்கும் தொடர்பு உள்ளது. இதுதொடர்பாக சிறைத்துறை டிஜிபி, தமிழக உள்துறைச் செயலர் ஆகியோருக்கு புகார் அனுப்பியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே இதுகுறித்து லஞ்சஒழிப்புத்துறை போலீஸார் விரிவான விசாரணை மேற்கொள்ள உத்தரவிட வேண்டும் என அதில் கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கு நேற்று பொறுப்பு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், “சிறையில் ஆயிரக்கணக்கான கவர்கள் தயாரிக்கப்பட்டதாக மட்டுமே தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் தகவல் பெறப்பட்டுள்ளது. ஆனால் அந்த கவர்கள் லட்சக்கணக்கான எண்ணிக்கையில் விற்கப்பட்டதற்கான ஆதாரங்கள் இல்லாமல் இந்த வழக்கை பொது நல வழக்காக தொடர முடியாது” என கருத்து தெரிவித்தனர்.

அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் எம்.ராதாகிருஷ்ணன், தணிக்கை அறிக்கையின் மூலமாகவே இந்த ஊழல் வெளியே வந்துள்ளது. அதை உறுதிபடுத்தவே தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் ஆவணங்கள் பெறப்பட்டுள்ளன என்றார். அதையடுத்து நீதிபதிகள், இதுதொடர்பாக மனுதாரர் முழுமையான விவரங்களுடன் புதிதாக மனுவை தாக்கல் செய்யலாம், என அறிவுறுத்தினர். மேலும் இந்த வழக்கை வாபஸ் பெற மனுதாரருக்கு அனுமதியளித்து தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளனர்.