மும்பை: எல்ஐசி நிறுவனத்தின் ஆண்டு குழுக் கூட்டம் மே 30-ம் தேதி நடைபெறவுள்ள நிலையில் இந்தக் கூட்டத்தில் டிவிடண்ட் தொகை உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்படுகிறது.

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை இன்சூரன்ஸ் நிறுவனமான எல்ஐசி நிறுவனத்தின் பங்குகளை விற்பனை செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது. எனினும் உக்ரைன் – ரஷ்யா போர் மூண்டதால் பங்குச் சந்தைகள் கடுமையாகச் சரிவு காரணமாக பங்கு வெளியீடு தள்ளிப்போனது.

பொதுபங்கு வெளியீடு மே 4-ம் தேதி தொடங்கி மே.9 தேதி வரை நடைபெற்றது. ரூ.902-949 விலையில் பங்கு வெளியிடப்பட்டது. மொத்தம் 31.6 கோடி பங்குகள் விற்கப்பட்டது. இதில் ஊழியர்களுக்கு 5 சதவீதமும், தனிநபர் காப்பீடுதாரர்களுக்கு 10 சதவீதமும் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

எல்ஐசி பங்கு விற்பனையில் பெரும்பாலும் உள்நாட்டு முதலீட்டாளர்கள் மட்டுமே ஆர்வம் காட்டியுள்ளனர். அந்நிய முதலீட்டாளர்களர்களுக்கு 2 சதவீதம் ஒதுக்கப்பட்ட நிலையிலும் அதைக்கூட வாங்குவதற்கு ஆர்வம் செலுத்தவில்லை.

எல்ஐசி பங்குகள் பங்குச்சந்தைகளில் பட்டியலிடப்பட்டன. முதலீட்டாளர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட எல்ஐசி ஒரு பங்கு ரூ.949 ஆக நிர்ணயிக்கப்பட்ட நிலையில், இந்த விலையைக் காட்டிலும் 8 சதவீதம் விலை குறைந்தே பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டது.

ஒரு பங்கு ரூ.867 என்ற அளவில் முதல் நாளில் விற்பனைக்கு வந்தது. இதனால், எல்ஐசி பங்குகளின் விலை மதிப்பு ரூ.6 லட்சம் கோடியாக மதிப்பிடப்பட்டிருந்த நிலையில், ரூ.5.57 லட்சம் கோடியாக சரிவை சந்தித்தது.

இன்று பங்குச்சந்தையில் எல்ஐசி பங்குகள் ரூ.829 என்ற விலையில் விற்பனையாகிறது. இந்தநிலையில் எல்ஐசி நிறுவனத்தின் நிர்வாகக் குழுக் கூட்டம் மே 30-ம் தேதி நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் கடந்த நிதியாண்டின் வரவு செலவு விவரங்கள் வெளியிடப்படுகிறது. எல்ஐசி நிறுவனத்தின் லாபம் உள்ளிட்ட விவரங்கள் வெளியாகும். இந்தக் கூட்டத்தில் எல்ஐசி டிவிடண்ட் தொகை குறித்தும் விவாதிக்கப்படுகிறது.