போகி பண்டிகைக்கு பழைய பொருட்களை தீயிட்டு எரிக்க வேண்டாம் என்று பொதுமக்களுக்கு சென்னை விமான நிலையம் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையின் முந்தைய நாள் போகி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகையின்போது பழைய பொருட்களான பிளாஸ்டிக், செயற்கை இழைகளால் தயாரிக்கப்பட்ட துணிகள், ரப்பர் பொருட்கள், பழைய டயர் மற்றும் டியூப்கள், காகிதம், ரசாயனம் கலந்த பொருட்கள் போன்றவை எரிக்கப்படுகின்றன.

இதுபோன்ற நச்சு கலந்த பொருட்களை எரிப்பதால் காற்று மாசு ஏற்படுவதோடு, அடர்ந்த புகை மற்றும் நச்சு வாயுக்களால் மூச்சு திணறல், சுவாச நோய்கள், இருமல் மற்றும் நுரையீரல் பாதிப்பு, கண், மூக்கு எரிச்சல் போன்ற நோய்கள் ஏற்படுகின்றன. மேலும், விமானங்களின் வருகை மற்றும் புறப்பாடுகளில் தாமதம் ஏற்படுகிறது.

இந்நிலையில் போகி பண்டிகைக்கு பழைய பொருட்களை தீயிட்டு எரிக்க வேண்டாம் என்று பொதுமக்களுக்கு சென்னை விமான நிலையம் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது

இது குறித்து சென்னை விமான நிலையம் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,” புகைமூட்டம் இல்லாத போகியைக் கொண்டாடுங்கள்! ஏனெனில், அடர் மூடுபனியில் கரும்புகை கலந்தால், அந்த காற்றுமாசு விமான நிலையத்திலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் பார்வைநிலையை வெகுவாகக் குறைத்து, விமான செயல்பாடுகளை பாதிக்கும்.” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.