புதுடெல்லி: இஸ்லாமிய மதகுருமார்கள் விதிக்கும் ஃப்த்வா எனப்படும் மத ஆணைகள் அரசியல் ஆயுதமாகப் பயன்படுத்தப்படுகின்றன என்று கேரள ஆளுநர் ஆரிஃப் முகமது கான் கூறியுள்ளார். டெல்லியில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் வார இதழான பாஞ்சஜன்யா நடத்திய நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய ஆளுநர் ஆரிஃப் இவ்வாறு கூறியுள்ளார்.

கேரள ஆளுநர் ஆரிஃப் முகமது கான் பேச்சிலிருந்து.. இஸ்லாமிய மதகுருமார்கள் சிலர் விதிக்கும் ஃபத்வா எனப்படும் மத ஆணைகள் அரசியல் ஆயுதமாகவே பயன்படுத்தப்படுகின்றன. உண்மையில் இத்தகைய ஃபத்வாக்களை நம்பிக்கையற்றவர்கள் விதிப்பதாகவே இஸ்லாம் கண்டிக்கிறது. இவற்றை குஃபுர் (Kufr’ Fatwa) எனக் கூறுகின்றனர்.

இஸ்லாமிய மதத்தில் மதகுருமார்கள் பல்வேறு அரசர்களால் உருவாக்கப்பட்டவர்கள். அரசர்கள் தாங்கள் உருவாக்கும் சட்டங்களுக்கு மத ரீதியான அங்கீகாரம் பெறுவதற்காகவே இத்தகைய மதகுருமார்களை உருவாக்கிவிட்டனர். உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் முகமது நபிகள் மறைவுக்குப் பின்னர் இஸ்லாம் மதத்தை அரசர்கள், அரசியல்வாதிகள் கைகளில் எடுத்துக் கொண்டனர். எது சரி எது தவறு என்பதை நம்மை படைத்தவரே நிர்ணயிப்பார் என்று குரானில் 200க்கும் மேற்பட்ட இடங்களில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதனால் ஃபத்வா என்பது இஸ்லாமிய மதகுருமார்கள் தந்ததே தவிர இறைத் தூதர் தந்தது அல்ல. நான் எனது இளமைக் காலங்களில் இந்தியில் பேசியதற்காகக் கூட ஃபத்வா பெற்றுள்ளேன். அதனால் தான் சொல்கிறேன் ஃபத்வா என்பது அரசியல் காரணங்களுக்காக பயன்படுத்தப்படும் அரசியல் ஆயுதம். இவ்வாறு அவர் கூறினார்.

எனக்கும் பினராயிக்கும் இது தான் வித்தியாசம்: தொடர்ந்து பேசிய அவர், “நான் கேரள ஆளுநராக பதவியேற்ற போதுதான் குடியுரிமை சட்டத் திருத்தம் பிரச்சினையும் தொடங்கியது. கேரள அரசால் ஒரு அரசியல் சாசன அலுவலகம் இவ்விவகாரத்தில் தலையிடுவதை ஏற்றுக் கொள்ள இயலவில்லை. ஆனால் அரசியல் சாசனத்தை பாதுகாக்கும் உறுதிமொழியை ஏற்றுக் கொண்ட என்னால் அதன் மீது தாக்குதல் நடைபெறுவதைப் பார்த்துக் கொண்டு அமைதியாக இருக்க முடியவில்லை. எனது அரசியல் சாசன கடமையைச் செய்ய நான் சிஏஏவை ஆதரித்தேன். கேரள முதல்வரிடம் நான் எனது கடமைகளைத் தான் செய்கிறேன் என்பதை புரிய வைத்தேன். எனக்கும் பினராயி விஜயனுக்கும் இடையே தனிப்பட்ட மோதல் ஏதுமில்லை. எனக்கும் அவருக்குமான ஒரு வித்தியாசம் இருக்கிறது. பினராயி, நீங்கள் கம்யூனிஸ்ட் என்றால் நானும் எந்தவித மத அமைப்பிலும் நம்பிக்கையற்றவன் தான். எனக்கு ஆன்மிகத்தில் மட்டுமே நம்பிக்கை இருக்கிறது. அதுதான் தர்மம். தர்மத்தின் அர்த்தம் பொறுப்புணர்வுடன் செயல்படுவது என்று எடுத்துரைத்தேன்” என்றார்.