நடப்பு ஃபிஃபா உலகக் கோப்பை தொடரில் அர்ஜென்டினா அணிக்கான முதல் கோலை அந்த அணியின் கேப்டன் மெஸ்ஸி பதிவு செய்துள்ளார். அந்த கோலை ஸ்கோர் செய்ததும் மைதானத்தில் குழுமியிருந்த பார்வையாளர்களுக்கு முன்பாக உற்சாகத்தில் ஆர்ப்பரித்து எழுந்தார். இருந்தாலும் அது ஆட்டத்தின் பிற்பாதியில் நீடிக்கவில்லை. இந்த போட்டியில் அர்ஜென்டினா தோல்வியை தழுவியுள்ளது.

குரூப் ‘சி’ பிரிவில் அர்ஜென்டினா மற்றும் சவுதி அரேபியா அணிகள் லுசைல் நகரில் உள்ள மைதானத்தில் விளையாடி வருகின்றன. இந்த போட்டியின் 10-வது நிமிடத்தில் அர்ஜென்டினா அணிக்கு பெனால்ட்டி வாய்ப்பு கிடைத்தது. அதை சரியாக பயன்படுத்திக் கொண்ட மெஸ்ஸி கோல் பதிவு செய்து அசத்தினார்.

இதன் மூலம் 2006, 2014, 2018 மற்றும் 2022 என நான்கு வெவ்வேறு உலகக் கோப்பை தொடர்களில் கோல் பதிவு செய்தவர் என்ற சாதனையை எட்டியுள்ளார் மெஸ்ஸி. இதற்கு முன்னர் பீலே, சீலர், க்ளோஸ் மற்றும் ரொனால்டோ போன்ற வீரர்கள் நான்கு வெவ்வேறு உலகக் கோப்பை தொடர்களில் இந்த சாதனையை எட்டியுள்ளனர்.

இந்த போட்டியின் முதல் பாதியில் அர்ஜென்டினா 1-0 என முன்னிலை பெற்றது. அந்த அணி சில முறை பந்தை வலைக்குள் தள்ளி இருந்தது. ஆனால் அவை ஆஃப் சைடு என அறிவிக்கப்பட்டது. இரண்டாவது பாதியில் 48 மற்றும் 53-வது நிமிடத்தில் அடுத்தடுத்து 2 கோல்களை பதிவு செய்து ஆட்டத்தில் முன்னிலை பெற்றது சவுதி அரேபியா.

அதன் பிறகு அர்ஜென்டினா வீரர்கள் எவ்வளவோ முயன்றும் கோல் பதிவு செய்ய முடியவில்லை. இது ஆட்ட நேர முடிவு, எக்ஸ்ட்ரா டைம் முடிவு வரை சென்றிருந்தது. இந்த போட்டிக்கு முன்னர் வரை தொடர்ச்சியாக 36 போட்டிகளில் வெற்றி பெற்று வந்த அர்ஜென்டினா இதில் தோல்வியை தழுவி உள்ளது. உலகக் கோப்பையை வெல்லும் பேவரைட் அணிகளில் ஒன்றானதாக கருதப்படும் அர்ஜென்டினாவுக்கு இது அதிர்ச்சிகரமான தோல்வியாகும். சவுதி அரேபியா 2-1 என இந்த போட்டியில் வெற்றி பெற்றுள்ளது. அந்த அணியின் கோல் கீப்பர் சிறப்பாக பந்தை தடுத்திருந்தார்.