அதிமுக தலைமை அலுவலகம் நேற்று வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

அதிமுகவின் நிரந்தர பொதுச் செயலாளர் ஜெயலலிதா, தொண்டர்களை மீளாத் துயரத்தில் ஆழ்த்திவிட்டு 2016-ம் ஆண்டு டிசம்பர் 5-ம் தேதி மறைந்தார். காலத்தால் அழியாத புரட்சிகரமான திட்டங்களால் தமிழக மக்களின் வாழ்க்கையில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்திய ஜெயலலிதாவுக்கு புகழ் அஞ்சலி செலுத்துவது அதிமுக தொண்டர்களின் கடமையாகும்.

ஜெயலலிதாவின் 5-ம் ஆண்டு நினைவுநாளான வரும் டிச.5-ம் தேதி காலை10 மணிக்கு மெரினா கடற்கரையில் உள்ள அவரின் நினைவிடத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் ஓ.பன்னீர்செல்வம், பழனிசாமி ஆகியோர் அஞ்சலி செலுத்துகின்றனர். அதைத் தொடர்ந்து உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி நடக்கிறது.

இதில் அதிமுக நிர்வாகி கள், மாவட்டச் செயலாளர்கள், எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

அதேபோல, தமிழகத்தின் மற்றபகுதிகளிலும் பிற மாநிலங்களிலும் ஜெயலலிதாவின் உருவப்படத்தை வைத்து அஞ்சலி செலுத்த நிர்வாகிகள் ஏற்பாடு செய்ய வேண்டும்.