சினிமா தயாரிப்பாளர், திமுக பிரமுகர் மற்றும் இவர்கள் தொடர்புடைய இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.1,000 கோடிக்கு வருமான வரி ஏய்ப்பு செய்திருப்பது தெரியவந்துள்ளது.

பிரபல சினிமா தயாரிப்பாளர் எல்ரெட் குமார். இவர், ‘விண்ணைத்தாண்டி வருவாயா’, ‘கோ’, ‘நீதானேஎன் பொன்வசந்தம்’ உட்பட பலதிரைப்படங்களை தயாரித்துள்ளார். இவரது சொந்த ஊர் ராமேசுவரம். ஆர்.எஸ். இன்ஃபோடெய்ன்மென்ட் என்ற தயாரிப்பு நிறுவனம்மூலம் படங்களை தயாரித்து வருகிறார். ஆர்.எஸ்.என்டர்பிரைசஸ் என்ற நிறுவனத்தையும், பல கல்குவாரிகளையும் நடத்தி வருகிறார்.

இவர் வருமான வரி ஏய்ப்பு செய்ததாக வந்த புகார்களின் பேரில்இவருக்கு சொந்தமான இடங்களில் கடந்த 4, 5-ம் தேதிகளில் வருமான வரித் துறையினர் சோதனை நடத்தினர். சென்னை, கோவை, ராணிப்பேட்டை, பெங்களூருவில் சுமார்30 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.

எல்ரெட் குமார், அவரது பங்குதாரர்களான ஜெயராம், பைனான்சியர் சுரேஷ் லால்வானி, எல்ரெட்குமாரின் உதவியாளர் கந்தசாமி மற்றும் ராணிப்பேட்டை தொழிலதிபரும் திமுக பிரமுகருமான ஏ.வி.சாரதி ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் ஒரே நேரத்தில்250-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில் கிடைத்த சொத்து ஆவணங்கள், வங்கி கணக்கு விவரங்கள், பணப் பரிமாற்றம் குறித்த தகவல்களை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

இதில், ரூ.1,000 கோடிக்கு வருமான வரி ஏய்ப்பு செய்திருப்பது தெரியவந்திருப்பதாக வருமான வரித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், சோதனையில் ரூ.3.82 கோடி ரொக்கம், 8.4 கிலோ தங்கமும் கைப்பற்றப்பட்டுள்ளது.

வரி ஏய்ப்பு செய்த கறுப்பு பணத்தை ரியல் எஸ்டேட், சினிமாபோன்றவற்றில் முதலீடு செய்துள்ளனர். அதற்கான ஆவணங்களும் சிக்கியுள்ளன. போலியான விற்பனை ரசீதுகளையும் தயாரித்துள்ளனர். கறுப்பு பண ஒழிப்பு நடவடிக்கையின் கீழ் இந்த சோதனை நடத்தப்பட்டதாக வருமான வரித் துறையினர் தெரிவித்துள்ளனர்.