மத்திய அரசின் உள்துறை இணைச் செயலாளர் ராஜீவ் சர்மா தலைமையிலான மத்தியக் குழுவினர் இன்று பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மழை வெள்ள பாதிப்புகளைப் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

இதுகுறித்துச் சென்னை மாநகராட்சி இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

”பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வடகிழக்குப் பருவ மழையின் காரணமாக ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்புகளை மத்திய அரசின் உள்துறை இணைச் செயலாளர் ராஜீவ் சர்மா தலைமையிலான மத்தியக் குழுவினர் இன்று (22.11.2021) பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

மத்தியக் குழுவினர் நேற்று ரிப்பன் கட்டிட வளாகத்தில், பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஏற்பட்டுள்ள மழை வெள்ள பாதிப்புகள் குறித்த புகைப்படக் கண்காட்சியைப் பார்வையிட்டு, உயர் அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொண்டனர்.

தொடர்ந்து, மத்தியக் குழுவினர் இன்று (22.11.2021) பெருநகர சென்னை மாநகராட்சி, திரு.வி.க.நகர் மண்டலத்திற்குட்பட்ட வீராசெட்டி தெரு, புளியந்தோப்பு நெடுஞ்சாலை மற்றும் ஜவஹர் நகர் ஆகிய பகுதிகளிலும், ராயபுரம் மண்டலத்திற்குட்பட்ட அழகப்பா சாலையிலும் மழை வெள்ள பாதிப்புகளைப் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

இந்த ஆய்வின்போது, மத்தியக் குழு உறுப்பினர்கள் விஜய் ராஜ்மோகன், ரனன்ஜெய் சிங், எம்.வி.என்.வரப்பிரசாத், அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் / வருவாய் நிர்வாக ஆணையர் கே.பணீந்திர ரெட்டி, அரசு முதன்மைச் செயலாளர் / பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, துணை ஆணையர் எம்.எஸ்.பிரசாந்த், எஸ்.ஷேக் அப்துல் ரஹ்மான், மா.சிவகுரு பிரபாகரன், சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரிய செயல் இயக்குநர் பி.ஆகாஷ், திரு.வி.க.நகர் மண்டலக் கண்காணிப்பு அலுவலர் எம்.பிரதீப் குமார் பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளர் முரளிதரன் மற்றும் நெடுஞ்சாலைத்துறை பொறியாளர்கள் உட்படப் பலர் உடனிருந்தனர்”.

இவ்வாறு சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.