உலக அளவில் கரோனா தொற்று கடந்த வாரத்தில் 71 சதவீதம் அதிகரித்துள்ளது. அதேசமயம், உயிரிழப்பு 10 சதவீதம் குறைந்துள்ளது என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

உலக சுகாதார அமைப்பு 2021 டிசம்பர் 27-ம் தேதி முதல் 2022 ஜனவரி 2-ம் தேதி வரையிலான உலக அளவிலான கரோனா தொற்று குறித்த அறிக்கையைவெளியிட்டுள்ளது. அதில் கடந்த வாரத்தில் உலக அளவில் கரோனா பரவல் திடீரென 71 சதவீதம் அதிகரித்துள்ளது. அதேசமயம், உயிரிழப்பு 10 சதவீதம் குறைந்துள்ளது.

கடந்த அக்டோபர் மாதத்திலிருந்து உலக அளவில் கரோனா தொற்று மெல்ல அதிகரித்து வந்தாலும் பெரிதான உயர்வு ஏதுமில்லை. ஆனால், கடந்த வாரத்துக்கு முந்தைய வாரத்தோடு ஒப்பிடுகையில் கடந்த வாரம் 71 சதவீதம் திடீரென தொற்று அதிகரித்துள்ளது. அதேசமயம், கரோனாவால் ஏற்படும் உயிரிழப்பு 10 சதவீதம் குறைந்துள்ளது.

கடந்த வாரத்தில் உலக அளவில் புதிதாக 95 லட்சம் பேர் பாதிக்கப்பட்டனர், 41 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ஆனால், ஜனவரி 2-ம் தேதி நிலவரப்படி, உலக அளவில் 28.90 கோடி பேர் கரோனாவில் பாதிக்கப்பட்டுள்ளனர். 54 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்துள்ளனர்.

இதில் அமெரிக்க மண்டலத்தில்தான் கடந்த வாரம் கரோனா தொற்று 100 சதவீதம் அதிகரித்துள்ளது. தென்கிழக்கு ஆசியப் பகுதியில் 78 சதவீதமும், ஐரோப்பிய மண்டலத்தில் 65 சதவீதமும், கிழக்கு மத்திய தரைக்கடல் பகுதியில் 40 சதவீதமும், மேற்கு பிசிபிக் பகுதியில் 38 சதவீதமும், ஆப்பிரிக்காவில் 7 சதவீதமும் கரோனா அதிகரித்துள்ளது.