தமிழகத்தில் பிளஸ் 2 மற்றும் பிளஸ் 1 பொதுத் தேர்வுகள் தொடங்க உள்ள நிலையில், வழிகாட்டு நெறிமுறைகளை அரசு தேர்வுகள் துறை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் 13ம் தேதி தொடங்கி ஏப்ரல் 3ம் தேதி வரையும், பிளஸ் 1 பொதுத் தேர்வுகள் 14-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 5ம் தேதி வரையும் நடைபெறவுள்ளது. இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ளது. இதன் விவரம்:

  • பிளஸ் 2 தேர்வு எழுதும் மொத்த மாணவ, மாணவிகள் 8,51,303 பேர்
  • பிளஸ் 1 தேர்வு எழுதும் மொத்த மாணவ, மாணவிகள் 7,88,064 பேர்
  • பிளஸ் 2 தேர்வுக்கான பள்ளி தேர்வு மையங்கள் 3,225
  • பிளஸ் 1 தேர்வுக்கான பள்ளி தேர்வு மையங்கள் 3,224
  • பிளஸ் 2 தேர்வுக்கான அறை கண்காணிப்பாளர்கள் 46,870
  • பிளஸ் 1 தேர்வுக்கான அறை கண்காணிப்பாளர்கள் 43,200
  • இரண்டு தேர்வுகளுக்கும் 3,100 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளது.

கைதிகள் வேலூர், கடலூர், சேலம், கோவை, மதுரை, பாளையங்கோட்டை, திருச்சி மற்றும் புழல் சிறைகளிலுள்ள தேர்வு மையத்தில் தேர்வெழுதவுள்ளனர். மாற்றுத் திறனாளி தேர்வர்களுககு தேர்வு மையங்களில் தரைத்தளத்தில் தனி அறைகள் ஒதுக்கிடவும் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது. பள்ளி மாணவர்கள், தனித்தேர்வர்களுக்கு தேர்வுக்கூட நுழைவுச்சீட்டுகள் ஆன்-லைன் மூலமாக பதிவேற்றம் செய்யப்பட்டுவிட்டது.

  • தேர்வுக்கூட நுழைவுச் சீட்டில் தேர்வர்களுக்காக சிறப்பு அறிவுரைகள் அச்சிடப்பட்டு வழங்கப்பட்டுள்ளது.
  • தேவையான எண்ணிக்கையில் விடைத்தாள்கள் மற்றும் முகப்புத்தாள்கள் ஆகியவை வழங்கப்பட்டுள்ளது.
  • பொதுத் தேர்வுகளுக்கு 281 வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்கள் பாதுகாப்பான இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன.
  • இந்த மையங்களுக்கு 24 மணி நேர ஆயுதம் தாங்கிய காவலர்கள் மூலம் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
  • தேர்வு மையங்களில் அடிப்படை வசதிகளை சிறப்பான முறையில் அமைத்திட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
  • தேர்வு மையங்களில் தடையற்ற மின்சாரம் வழங்கிட மின்சார வாரியத் தலைவருக்குக் கடிதம் அளிக்கப்பட்டுள்ளது.

தேர்வுகளை, செம்மையாக நடத்திட ஒத்துழைப்பு நல்கக்கோரி அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் மாவட்டத் தேர்வுக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவில் மாவட்டக் காவல் துறை கண்காணிப்பாளர், மாவட்ட வருவாய் அலுவலர், சார் ஆட்சியர், வருவாய் கோட்டாட்சியர் ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர்.

  • தேர்வு மைய வளாகத்திற்குள் அலைபேசியை எடுத்து வருதல் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.
  • தேர்வர்கள் தங்களுடன் அலைபேசியை கண்டிப்பாக எடுத்து வருதல் கூடாது.
  • தேர்வர்களது அலைபேசிகள் பராமரிப்பிற்கு தேர்வு மையங்கள் பொறுப்பேற்காது.
  • தேர்வு பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் தேர்வறையில் அலைபேசியை வைத்திருப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
  • இவ்வறிவுரையை மீறிபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
  • தேர்வு நேரங்களில் ஒழுங்கீனச் செயல்களில் ஈடுபடுவது கடுங்குற்றமாக கருதப்படும்.
  • ஒழுங்கீனச் செயல்களுக்கு உடந்தையாக உள்ள பள்ளிகளின் அங்கீகாரத்தினை ரத்து செய்திட பரிந்துரை செய்யப்படும்.
  • அரசுத் தேர்வுகள் இயக்ககத்தில் முழுநேரத் தேர்வுக் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.
  • தேர்வுக் காலங்களில் ஒவ்வொரு நாளும் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை இக்கட்டுப்பாட்டு அறையினை தொடர்புக் கொள்ளலாம்.
  • மாணவர்கள், 9498383081, 9498383075 எண்ணில் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொள்ளலாம்.